எல்லோருக்கும் ஜஸ்ட் 40-ஐ ஒட்டிய வயதுதான்.. கொரோனாவால் சென்னையில் நேற்று 3 பேர் பலியான பின்னணி
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், தமிழகத்தின் மொத்த பாதிப்பு என்பது 9 ஆயிரத்தை தாண்டிவிட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மொத்த பாதிப்பு 5262 என்ற அளவில் அதிகரித்தது.
நேற்று கொரோனா வைரஸ் காரணமாக பலியான மூன்று பேர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ராத்திரியானாலும் சரி.. அங்கேயே இருங்க.. யாரும் கிளம்பி போகக் கூடாது.. ஜெ. பாணியில் ஜெகன்!
சென்னை மருத்துவமனை
அதில் ஒருவர் 41 வயது நபர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுவாசக்கோளாறு அதிகரித்ததால் பலியாகியுள்ளார். இதேபோன்று சென்னையை சேர்ந்த 43 வயதான ஒரு நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மே 13 ஆம் தேதி மாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்கனவே நீரழிவு பாதிப்பு இருந்தது. நிமோனியா மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ரத்த அழுத்தம்
இதேபோன்று 48 வயது நபர் மே 12ஆம் தேதி நிமோனியா மற்றும் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றிகரமான சிகிச்சை
ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 22 புற்றுநோயாளிகள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் 12 பேர், 2 எச்ஐவி பாஸிடிவ் நோயாளிகள். 2 பேர் கல்லீரல் பிரச்சினை கொண்ட நோயாளிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வெற்றிகரமாக குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த 22 புற்றுநோயாளிகளின் 13 பேருக்கு தலை அல்லது கழுத்து புற்றுநோய் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக புற்று நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த வைரஸ் தாக்கத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவிக்கிறது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இதுவரை பலியான கொரோனா நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் பிரச்சினை மட்டுமின்றி, வேறு சில உடல் உபாதைகள் இருந்ததாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தமிழகத்தில் 2176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போலவே, அருகாமையில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சமீபகாலமாக அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.
அண்டை மாவட்டங்கள்
நேற்று மட்டும், தலா 25 புதிய கேஸ்கள் இங்கு பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 416 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. இருப்பினும், குறைவான அளவுக்கு இருக்கிறது. அந்த மாவட்டத்தில் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 42 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவித்தன.