தனியார் வங்கிகளில் எவ்வளவு பணம் சேமிப்பது பாதுகாப்பானது.. வங்கி ஊழியர்கள் சொல்வது என்ன?
சென்னை: தனியார் வங்கிகளில் ஒருவர் பெயரில் 5 லட்சம் வரை மட்டுமே பணம் சேமிப்பது பாதுகாப்பானது. அதற்கு மேல் சேமித்தால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே இப்போது உள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
2016ம் ஆண்டில் அபார வளர்ச்சி பெற்று வந்த லட்சுமி விலாஸ் வங்கி 2வது காலாண்டில் 45 சதவீத வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால் வெறும் 4 வருடத்தில் முழுவதும் சிதைந்து 400 கோடிக்கும் மேல் நஷ்டமடைந்து தற்போது இப்படி மோசமான நிலையை அடைந்துள்ளது.
கடும் நிதிநெருக்கடியில் சிக்கி உள்ளதால் லட்சுமி விலாஸ் வங்கி மொரொட்டோரியத்தில் சிக்கியிருக்கிறது. அந்த வங்கியில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வாகியாக அடுத்த ஒரு மாத காலத்திற்கு, கனரா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் திரு.டி.என்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிஎம்சி.. எஸ் பேங்க்.. இப்போது லட்சுமி விலாஸ்.. அடுத்தடுத்து சிக்கலில் மாட்டிய 3 வங்கிகள்.. ஷாக்கிங்
வங்கிகளின் நிலைத்தன்மை
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் சேமிப்புகளை வங்கிகளில் வைத்திருக்கும் பொதுமக்களின் மனதில், வங்கிகளின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திவால் நிலைக்கு என்ன காரணம்
பெரிய கடன்களை வாங்கிய பெருமுதலாளிகளில் சிலர், தாம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை. இதுவே பிரச்சனைக்கு காரணம். ரேன்பாக்ஸி நிறுவனத்திற்கு வழங்கிய 720 கோடி ரூபாய் திரும்பி வராததால் கடும் சிக்கலில் சிக்கியிருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கி. இந்தியாவின் 16 மாநிலங்களில், மொத்தம் 569 கிளைகளுடன் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த லட்சுமி விலாஸ் வங்கி இப்போது மோசமான நிலைக்கு போக ரிலிகேர் குழுமம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், காக்ஸ் மற்றும் கிங்ஸ் நிறுவனம், நீரவ் மோடி, காபி டே நிறுவனம், ரிலையன்ஸ் வீட்டுவசதி நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்களும் முக்கிய காரணம்ஆகும்.
39வது வங்கி
வங்கிகள் தேசியமயத்திற்கு பிறகு நெருக்கடியை சந்தித்து, திவால் நிலைக்கு சென்றுள்ள 39-வது வங்கி லட்சுமி விலாஸ் வங்கியாகும். ஏற்கனவே அண்மைக்காலத்தில் பிஎம்சி, எஸ்பேங்க் போன்றவையும் சிக்கலில் சிக்கியிருக்கின்றன. இப்படி வங்கிகள் அடிக்கடி திவாலாகுவது வங்கிகளின் கணக்கு வைத்து பணம் சேமித்து வைத்துள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கிகள்
இப்போதைய நிலையில் வங்கிகளில் எவ்வளவு பணம் சேமிக்கலாம். அதற்கு உத்தரவாதம் என்ன என்பது குறித்து வங்கி ஊழியர்கள் சிலர் கூறும் போது, இப்போதைய நிலையில் தனியார் வங்கிகளில் 5 லட்சம் வரை பணம் சேமிப்பது பாதுகாப்பானது. ஏனெனில் திவால் சட்டப்படி அரசு நீங்கள் போட்டுள்ள பணத்திற்கு 5 லட்சம் வரை காப்பீடு அளிக்கிறது. அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் உத்தரவாதம் இல்லை. ஒருவரிடம் 5லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பணத்தை குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பிரித்து போட்டு வைக்கலாம். அப்படி செய்தால் பாதுகாப்பாக இருக்கும்.