குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க தேவைப்படும் கால அவகாசம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்க காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்க கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட கோரியும் கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய மாவட்டம் தோறும் உதவி மையங்களை விரைந்து அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பெண்கள் உதவி மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதனையடுத்து பெண்கள் உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும், இதற்காக தேவைப்படும் கால அவகாசம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.