'இப்படி பேட்டி' கொடுக்க ரஜினிக்கு என்ன உரிமை இருக்கு.. நைசா தலையில் கட்டுறீங்களா.. வெடித்த சர்ச்சை
சென்னை: ஒருவழியாக.. அரசியலுக்கு வருவதாக இன்று உறுதிபடுத்தி விட்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்த முடிவு வெளியானது முதல் அவரது ரசிகர்கள் இனிப்புகளை கொடுத்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் அளித்த பேட்டிதான், இப்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
தனது உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையிலும்கூட, தமிழக மக்களுக்காக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியை துவங்குவதாக அப்போது தெரிவித்தார் ரஜினிகாந்த்.
அது வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால் அவர் கூறிய அடுத்த வார்த்தைதான் அதிர்ச்சி ரகம். இந்த அரசியல் பயணத்தில் தான் வெற்றி பெற்றால் அது தமிழக மக்களின் வெற்றி என்ற ரஜினிகாந்த்.. ஒருவேளை தோல்வி அடைந்தால், அது தமிழக மக்களின் தோல்வி என்று ஒரே போடாக போட்டார்.
"பாஜக அறிவுசார் பிரிவின் தலைவர்".. ரஜினியின் கட்சிக்கு இவர்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர்.. பின்னணி!
திரை செல்வாக்கு
ரஜினிகாந்த் என்ற திரை உலக ஆளுமைக்கு பல தசாப்தங்களாக தமிழகத்தில் தனி செல்வாக்கு இருக்கிறது. 1996ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்ததால்தான், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தது என்று அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இமேஜ் அடி வாங்கும்
ஆனால் நேரடி அரசியல் களம் என்பது வேறு. இதில் தோல்வி அடைந்தால் இத்தனை வருடமாக சேர்த்து வைத்த ஒட்டுமொத்த இமேஜ் பறிபோய்விடும் என்ற அச்சம் ரஜினிகாந்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அதேநேரம் அரசியலுக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏனோ ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் அரசியலில் தோல்வி ஏற்பட்டால் அது மக்களின் தோல்வி என்று மக்கள் மீது பழியை திருப்பி விட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மக்கள் தலையில் தோல்வி
இதன் மூலம், ஒருவேளை, ஆளும் கட்சியாக முடியாவிட்டாலும், அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்த் அளவுக்கு கூட வாக்குகளை பெற முடியாமல், வீழ்ச்சி அடைந்தால், மக்கள் எழுச்சி அடையவில்லை, மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று பல காரணங்களை கூறி மக்கள் தலையிலேயே தோல்வியை கட்டிவிடலாம் என்ற திட்டம் பின்னணியில் இருக்கிறது.
காரணம் ரெடி
மேலும், கொரோனா நோய் பரவக் காரணமாக நேரடியாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒருவேளை தேர்தலில் தோல்வியடைந்தாலும் நேரடியாக ரஜினிகாந்த் பிரச்சாரத்திற்கு சென்று இருந்தால் மக்கள் பெரும் ஆதரவு தந்து இருப்பார்கள், கொரோனா காலதால்தான், அதிக ஓட்டுகளைப் பெற முடியவில்லை என்று காரணம் சொல்லி விடலாம். ஏதோ ஓரளவுக்கு வாக்குகளை சிதற வைக்கவும், பிரிக்கவும் மட்டும் ரஜினிகாந்த் கட்சி பயன்படக்கூடும்.. இது திமுக போன்ற எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மக்கள் பிரதிநிதியா ரஜினி?
தனது இமேஜ் சரிவடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், தோற்றால் அது மக்களின் தோல்வி என்று ஒரே போடாக போட்டு விட்டார் ரஜினிகாந்த் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தனது தோல்வி, மக்களின் தோல்வி என்று அவர் கூறுவதும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே பிரதிநிதி தான் தான் என்ற ரீதியில் தன்னைத்தானே ஒரு பிம்பத்தை வடிவமைத்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஜனநாயகம் இல்லை
ஒட்டுமொத்தமாக மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கூட, தாங்கள் தேர்தலில் தோற்றால் அது தமிழக மக்களின் தோல்வி என்று பகிரங்கமாக அறிவிக்காத நிலையில், இதுவரை ஒரு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு கூட வெற்றி பெறாத ரஜினிகாந்த், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே குரலாக தன்னைக் காட்டிக் கொள்வது அவரது அதீத நம்பிக்கையை காட்டுகிறது. இது மக்களுக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற குரல்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. எது எப்படியோ.. இந்த ஒற்றை வார்த்தையால், கிரேட் எஸ்கேப் ஆகி விட்ட சந்தோஷம் மட்டும் ரஜினிகாந்த் முகத்தில் தனித்து தெரிந்ததை பிரஸ்மீட்டில் கவனிக்க முடிந்தது.