கடந்து வந்த பாதை நெடுகிலும் கல்லும் முள்ளும்.. மரணித்துப் போன ராஜகோபால்.. மறக்க முடியாத சரவண பவன்
Recommended Video
சென்னை: பெண்ணாசையால் கொலை செய்துவிட்டு தற்போது மருத்துவமனையில் உயிரிழந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் கடந்து வந்த பாதைகளில் முள்ளும் கல்லுமே இருந்தன.
இன்று பல கோடிக்கு அதிபராக இருந்த ராஜகோபால் (72) தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணையாடி என்ற கிராமத்தில் 1947 -ஆம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வெங்காய விவசாயியாவார். சிறு வயதிலிருந்தே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவர்.
கடந்த 1973-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது கே கே நகரில் மளிகைக் கடையை திறந்தார். அப்பகுதி மக்களால் அண்ணாச்சி, அண்ணாச்சி என அன்போடு அழைக்கப்பட்டார். இந்த நிலையில் கே கே நகரில் உள்ளவர்கள் தி நகருக்கு சென்று ஹோட்டலில் சாப்பிடும் நிலை இருந்ததால் அவர்களது நலன் கருதி 1981-ஆம் ஆண்டு ஒரு சிறிய ஹோட்டலை திறந்தார்.
தட்டில் வாழை இலையை பரப்பி.. சுடச்சுட சோறு போட்ட ராஜகோபால் அண்ணாச்சி!
முருகன் மீது பக்தி
இவரது ஹோட்டலின் சாம்பார் சுவையாக இருந்ததால் அங்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். இதையடுத்து தனது வியாபாரத்தை விஸ்தரித்தார். முருகன் மீது அதீத பக்தி கொண்டதால் தனது ஹோட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார்.
45 கிளைகள்
அவ்வாறு தொடங்கிய ஹோட்டல் இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகளும் வெளிநாடுகளில் 45 கிளைகளையும் தாண்டி ஆலமரமாக காட்சி அளிக்கிறது. அப்போதெல்லாம் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்ததோடு 3 வேளை உணவையும் கொடுத்தது சரவணபவன்.
ஜோதிடர்
இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான ராஜகோபாலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தனது ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு போய் காண்பித்தார். ஏற்கெனவே இரு மனைவிகள் உள்ள அண்ணாச்சிக்கு 3-ஆவது திருமணம் செய்தால் மட்டுமே சறுக்கலிலிருந்து தப்ப முடியும் என ஜோதிடர் தெரிவித்தார்.
தந்தை வயது
அப்போது ராஜகோபாலுக்கு 48 வயதாக இருந்தது. இதனால் அவருக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. அப்போது தான் தனது ஹோட்டலில் உதவி மேலாளராக இருந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். ஆனால் அவரோ தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை திருமணம் செய்ய முன்வரவில்லை.
உருட்டல் மிரட்டல்
இதனால் அவர் தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரையே திருமணம் செய்து கொண்டார். இது ராஜகோபாலுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. தனக்கு சொந்தமான ஜீவஜோதி யாருடனும் வாழக் கூடாது என்பதால் ஜீவஜோதியின் கணவரை அழைத்து உருட்டி மிரட்டினார்.
வழக்கு
ஆனால் அவர் பணியவில்லை. இதனால் கடந்த 2001-ஆம் ஆண்டு அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்தி சென்று மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சரணடைய உத்தரவு
இதையடுத்து அவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். எனினும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அத்துடன் ஜூலை 7-ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
ஹைகோர்ட்டில் கோரிக்கை
இந்த நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சென்னை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது மகன் ஹைகோர்ட்டில் கோரினார்.
வேதனை
இதை நீதிமன்றம் ஏற்றதை அடுத்து கடந்த 3 நாட்களாக வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இத்தனை சாம்ராஜ்ஜியத்தை சேர்த்து வைத்திருந்தாலும் பெண்ணாசையால் அண்ணாச்சியின் உயிர் பிரிந்தது வேதனையிலும் வேதனையாகும்.