பாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்
சென்னை: பாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்காமல் ஒரு சிலர் ஏரியா சண்டையாக பார்த்ததால்தான் இந்த கலை அழிந்தது என பிரபல பாக்ஸர் தேவானந்த் தெரிவித்துள்ளார். மேலும் பாக்ஸிங்கிற்கு என ஒரு விளையாட்டு மைதானம் இல்லாதது குறித்தும் தேவானந்த் கவலைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை அடுத்து தற்போது பாக்ஸிங் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. 1970 களில் நடந்த பாக்ஸிங் குறித்த கதைதான் இது. அந்த வகையில் தமிழகத்தில் பாக்ஸிங் யாருக்கும் தெரியாதது ஏன், பாக்ஸிங் போட்டிக்கு தடை ஏற்பட்டது எதனால் என்பது குறித்து தகவல்களும் வெளியாகியுள்ளன
இதுகுறித்து இந்தியன் டைகர் பாக்ஸர் பி.ஏ.வி. தேவானந்த் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
கே: முதன் முதலில் நீங்கள் எப்போது தேசிய அளவிலான பாக்ஸிங் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டீர்கள்
ப: 1986 ஆம் ஆண்டு பாக்ஸிங்கில் சப் ஜூனியர் பிரிவில் போட்டியிட்டு மாநில அளவில் சாம்பியன் ஆனேன். தேசிய அளவில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளேன். முதல் முயற்சியிலேயே வென்றதால் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. தேசிய அளவில் சாம்பியன் ஆனேன். அதில் தர்மேந்திர யாதவ் மற்றும் நான் ஆகி. இருவர் சிறப்பான வீரர்களாக வந்தோம்.
பெஸ்ட் பாக்ஸர் அவார்டு
அப்போது எங்களிடம் ஷூ அளவு என்ன என கேட்டார்கள். நான் 8 என்றேன். தர்மேந்திர யாதவ் 6 என்றார். ரிங் ஷூவின் சைஸ் 6 என்பதால் அவருக்கு பெஸ்ட் பாக்ஸர் பட்டத்தை அளித்தார்கள். இவரும் சிறப்பான ஆட்டக்காரர்தான். அடுத்த முறை சப் ஜூனியர் அளவில் போட்டியிட்டேன், வென்றேன். எனக்கு பெஸ்ட் பாக்ஸர் விருது கொடுத்தார்கள். என்னிடம் யாரும் 3 ரவுண்டுக்கு மேல் விளையாடக் கூடாது, முதல் ரவுண்டிலேயே நாக் அவுட் செய்ய வேண்டும் என நம்பிக்கை பிறந்தது. எனக்கு காயங்கள் இருந்த நேரத்தில் நான் விளையாடிய போது ஒருவரை நாக் அவுட் செய்ய 3 ரவுண்ட் எடுத்து கொள்வேன். அதுவும் விரல் விட்டு எண்ணக் கூடிய மேட்ச்களில்தான். மற்றபடி ஒரே ரவுண்டில் அடித்து நாக் அவுட் ஆகிவிடுவேன். என்னை எதிர் போட்டியாளர் நெருங்கி அடிப்பதற்கு முன்பே நான் அடித்துவிடுவேன். இதனால் அவர் என்னை அடிக்க வாய்ப்பை தர மாட்டேன்.
சப் ஜூனியர் சாம்பியன்
1988-ஆம் ஆண்டு மீண்டும் சப் ஜூனியர் சாம்பியன் ஆனேன். 1989 ஆம் ஆண்டு ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றேன். இந்த போட்டியில் நான் பெஸ்ட் பாக்ஸர் வாங்கவில்லை. ஆனால் நான்தான் ஒரே ஒருவர் தேசிய அளவில் தமிழகத்திற்கு கோல்டு மெடல் பெற்றேன். 4 ஆண்டுகள் ரயில்வேக்காக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றேன். முதல் ரவுண்டிலேயே நாக் அவுட் செய்ததால் எனக்கு வடக்கு பக்கத்தில் நல்ல பெயர் இருந்தது.
பாக்ஸிங் விளையாட்டை தேர்வு ஏன்
கே: எதற்காக பாக்ஸிங் விளையாட்டை தேர்வு செய்தீர்கள்
ப: எனது அப்பா பாக்ஸிங் சாம்பியன்தான். எனது குடும்பமே பாக்ஸிங் குடும்பம்தான். எல்லாரும் மாநில சாம்பியன்கள். எங்கள் குடும்பத்துக்குள்ளேயே போட்டியிட்டு சாம்பியன்ஷிப் வாங்கி வருவோம். நாங்கள் அமேசூரில் பதிவு செய்து விளையாடி வந்தோம். ஒரே எடைப்பிரிவில் போட்டியிடும் போது பாக்ஸிங்கில் நாம் செய்யும் ஸ்டைல், அடிக்கும் பஞ்ச் உள்ளிட்டவற்றை வைத்துதான் சாம்பியன் பட்டம் தருவார்கள்.
கே: எந்த காரணத்தால் பாக்ஸிங் மறைந்துவிட்டது?
ப: தற்போதைய சூழலில் பாக்ஸிங் பிரபலமடையவில்லை. நேரு ஸ்டேடியத்தில் 40-க்கு 40 அறையில் 20 பேர் பங்கேற்கும் வகையில் பாக்ஸிங் நடத்தப்படுகிறது. அப்போது எப்படி வெளி உலகிற்கு தெரியும்? கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கெல்லாம் வட சென்னையில் விளையாட்டு மைதானம் இருக்கிறது. ஆனால் பாக்ஸிங்கிற்கென ஏதாவது மைதானம் இருக்கா என்றால் இல்லை. எங்களுக்கென இருந்த அசோசியேஷனில் இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் இருக்கும் வரை நன்றாக இருந்தது. எங்களுக்கென மைதானம் இருந்தது. அதில் பாக்ஸிங் நடத்துவோம். அனைவருக்கும் தெரிந்தது. பார்வையாளர்கள் நிறைய பேர் வருவார்கள். இந்த விளையாட்டு புகழ்பெற்றது.
பாக்ஸிங்கிற்கு ரசிகர்கள் இருக்காங்க
கே: பாக்ஸிங்கிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களா
ப: 1970-களில் பாக்ஸிங்தான் நம்பர் 1 ஆக இருந்தது. தற்போது அந்த கேமை அப்படியே அழித்துவிட்டார்கள். காரணம் ரவுடியிஸம் என்ற பிரச்சினையை கூறி அந்த விளையாட்டை இல்லாமல் செய்து விட்டார்கள். திருவொற்றியூர், ராயபுரம் சார்பட்டா பரம்பரை, பேசின் பிரிட்ஜிலிருந்து புளியந்தோப்பு வரை இடியாப்ப நாயக்கர் பரம்பரை இவர்களுக்குள் சண்டை வரும்.
இதில் ஒரு அணி இன்னொரு அணியை வீழ்த்தினால், எங்க ஏரியாவுக்குள் வந்து ஒருவரை அடிச்சிட்டு எப்படி போவீங்கன்னு" கேட்டு இது ஒரு ஏரியா பிரச்சினையாக மாறியது. பாக்ஸிங்கை விளையாட்டாக பார்த்திருந்தால் அது இதுவும் மற்ற விளையாட்டுகளை போல் இருந்திருக்கும். இதில் சிலர் செய்த தவறுகளால் பாக்ஸிங்கை தடை செய்தார்கள். இந்த பரம்பரை குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் குடும்பத்திலிருந்து இந்த பரம்பரையுடன் யாரும் போட்டியிட்டதில்லை என்றார் இந்திய பாக்ஸர் தேவானந்த்.