சசிகலாவின் கடைசி நேர டிவிஸ்ட்.. திமுக கலக்கம்.. கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டம்!
சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தது அதிமுகவுக்கு மகிழ்ச்சி தந்துள்ளதாக இல்லையோ, திமுக கூட்டணி கட்சிகளுக்கு குஷி கொடுத்துள்ளது.
உண்மைதான்.. கடந்த லோக்சபா தேர்தலின்போது தேனி தவிர்த்த பிற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. தங்கள் கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாக போனவாரம் வரை பேசி வந்தனர் திமுக தலைவர்கள்.
ஆனால் தொகுதி பங்கீடு என்று வந்ததும் நிலைமை தலைகீழாக மாறிப் போய் விட்டது. இதுவரை திமுக கூட்டணியில் எந்த ஒரு பெரிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு செய்யப்படவில்லை.
30 நிமிட வாக்குவாதம்- தேர்தலில் போட்டியிடாதே- சசிகலா உத்தரவால் ஷாக் ஆன டிடிவி தினகரன்- ஆக அடுத்து?
திரிசங்கு சொர்க்கம்
காங்கிரஸ் கட்சியை பற்றி சொல்லவே வேண்டாம். ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தில் மறந்து கூட ஸ்டாலின் அல்லது திமுக பற்றி பேசுவதே கிடையாது. தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். ஆனால், திமுக அதைப் பற்றி பெரிதாக கவலைப்பட்டது போல தெரியவில்லை. இதே போல தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் ஆகியவையும் திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் திருப்தியடையவில்லை. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. "திரிசங்கு சொர்க்கம்" என்போமே, அதுபோல திமுக கூட்டணி கட்சிகள் நிலைமை இருக்கிறது.
சசிகலாவை நம்பி
அதிமுக பக்கம் கூட பரவாயில்லை. பாமக போன்ற ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. பாஜக கூட்டணியும் உறுதிதான். தேமுதிக இன்னும் சில நாட்களில் கூட்டணிக்குள் வந்துவிடும். கருணாநிதி காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் இப்போது கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் திமுகவால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது சசிகலா ஃபேக்டர்.
ஸ்டாலின் பேச்சு
சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால் அதிமுக ஓட்டுகள் இரண்டாக பிரிந்து திமுகவுக்கு எளிதாக வெற்றி கிடைத்துவிடும் என்பது அந்த கட்சித் தலைமை நம்பிக்கையாக இருந்தது. சசிகலா சிறையில் இருந்து ரிலீசான அன்று, பொது மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், பெங்களூரில் இருந்து ஒருவர் வந்துள்ளார். இனி அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறியிருந்தார். சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு பற்றி உறுதியான தகவல் கிடைக்காமல் ஸ்டாலின் இவ்வாறு கூறினார் என்றால், திமுக எந்த அளவுக்கு சசிகலா மீது நம்பிக்கை வைத்து இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதிமுகவுக்கு பலம்
சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணிக்கு அது பலமாக பார்க்கப்படுகிறது. சசிகலா அரசியலில் இல்லாததன் காரணமாகவே, அதிமுக திரும்ப ஆட்சிக்கு வந்துவிடும் என்று யாரும் அடித்துச் சொல்ல முடியாதுதான். அதற்கு வேறு உழைப்புகளும் தேவை. ஆனால், அவரால் வாக்குகள் சிதறல் கிடையாது. அதிமுக ஓட்டு வங்கி பெரிதாக பாதிப்படையாது என்பதால் திமுகவுக்கு சரியான போட்டியாக அமையப்போகிறது இந்த தேர்தல். இதுதான் திமுக கூட்டணி கட்சிகளுக்கு குஷி கொடுத்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள்
இனிமேல் தாங்கள் கேட்கும் தொகுதிகளுக்கு திமுக தலைமை சம்மதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கூறிக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை திமுக இன்னமும் கூட தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வராவிட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள திமுகவின் தோழமை கட்சிகள் சில முடிவு எடுக்கக் கூடும்.
திமுக நிலைமை
கடந்த சட்டசபை தேர்தலின் போது மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்த் கட்சி தலைமையில் சில கட்சிகள் ஒன்றிணைந்தன. இதன் காரணமாக வாக்குகள் சிதறி சிறு இடைவெளியில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இப்போது கமல்ஹாசன் என்ற ஒரு மூன்றாவது சக்தி உருவெடுத்துள்ளதால், திமுக, தனது கூட்டணி கட்சிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சசிகலா விலகல், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் ஆகிய இரண்டும் திமுகவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு கோலாகலமாக பார்க்கப்படுகிறது.