ஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா?
சென்னை: இப்போதைய நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் எல்லோரும் காலாண்டு தேர்வை விறுவிறுப்பாக எழுதி கொண்டு இருப்பார்கள். பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளை சிறப்பாக மார்க் எடுக்க வைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கத்தான் இந்த கட்டுரை.
தமிழகத்தில் 15 அல்லது 20 வருடத்திற்கு முன்பு இருந்த கல்வி கற்பிக்கும் முறையில் எந்த பெரிய மாறுதல்களும் இப்போது இல்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. நான் படித்த கால கட்டத்தில் அன்று பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்திய பின் அந்த பாடத்தை எல்லா மாணவர்களும் முழுமையாக அறிந்து கொண்டார்களா என்பது பற்றி கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த பாடத்திற்கு செல்வார்கள். வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் , அதை செய்ய முடியாதவர்கள் திட்டு வாங்குவார்கள் ஏன் அடியும் வாங்குவார்கள்.
பரிட்சை வரும் போது அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் படிப்பாளிகள். படிக்காதவர்கள் முட்டாள்கள் என்றும், சுமாராக படித்தவர்கள் ஆவரேஜ் என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். அதேநிலை இன்றும் தமிழக பள்ளிகளில் காணப்படுகிறது. தற்போது தற்போது கல்வி கற்பிக்கும் முறை சிலர் மட்டுமே நன்கு படிப்பதையும் மற்றவர்கள் கல்வி கற்காமல் போவதையும் ஊக்குவிக்கிறது.
அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. காலாண்டு லீவு ரத்து என்பது வதந்தி.. பள்ளி கல்விதுறை அறிவிப்பு
ஆசிரியர்கள் காரணமில்லை
மேற்கண்ட நிலைக்கு காரணம் ஆசிரியர்களா என்றால் நிச்சயம் இல்லை. குறைந்த அளவு மாணவர்களுக்கு ( 20 முதல் 25) ஒரு ஆசிரியர் என்ற நிலை இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்த ஆசிரியர்களால் முடியும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை.
குழந்தைகள் போக்கில் கல்வி
மற்றொரு முக்கியமான விஷயம் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கற்பிக்கும் முறை என்பது சரியல்ல. சில குழந்தைகள் கற்பூரம் போல் புரிந்து கொள்ளும். சில குழந்தைகள் விளையாட்டு தனமாக இருப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். படித்த உடன் அவர்களுக்கு மனதில் ஏற்றிக்கொள்ள விருப்பம் இருக்காது. எனவே குழந்தைகளுக்கு அவர்கள் போக்கிலேயே கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும்.
மனப்பாடம் இல்லை
இதற்கு ஒரு உதாரணமாக தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கு காரணம் என் மகள் அங்கு கடந்த இரண்டு வருடம் படித்தாள். இப்போது தமிழகத்தில் படிக்கிறாள் . தெலுங்கானா பள்ளிகள் அனைத்திலும் 7ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ கல்வி முறை. தான். அதன்பிறகே மாநில கல்வி முறையாக மாறும். என் மகள் படித்த பள்ளியில் சற்று வித்தியாசமாக அனைத்துமே செயல்முறை வழிக்கல்வியாக இருக்கும். ஒரு குழந்தையை முழுமையாக அந்த பாடத்தை படிக்க வைக்க பாடத்தை படமாக வரைதல் உள்பட பல்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். ஒவ்வொரு பாடத்திற்கு செயல்முறை பயிற்சிகள், விளையாட்டு பயிற்சிகள் போல் இருக்கும். ஜாலியாக அந்த குழந்தைகளை படிக்க வைத்து விடுவார்கள்.
வாரம் வாரம் கேள்விகள்
என்ன பாடங்கள் இந்த வாரம் நடத்த போகிறோம் என்பதை பெற்றோருக்கு முன்பே வாட்ஸ் அப்பில் மெசேஜ்சும், சுற்றறிக்கையும் வாரம் வாரம் கொடுத்துவிடுவார்கள். இதன் மூலம் குழந்தைகள் இந்த வாரம் படிக்க போகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிய முடியும்.அந்த சுற்றறிக்கையில் பெற்றோர்களை குழந்தைகளிடம் இப்படி எல்லாம் கேள்வி கேளுங்கள், குழந்தைகளை இப்படி எல்லாம் கேள்வி கேட்க சொல்லுங்கள் என ஒவ்வொரு நாளும் ஊக்குவிப்பார்கள். இதன் மூலம் தினசரி நடத்தும் பாடம் குறித்து பல்வேறு கேள்விகளை குழந்தைகளை கேட்க வைத்து பெற்றோரே குழந்தைக்கு புரியும்படியான பதில் சொல்ல வைப்பார்கள். ஒவ்வொரு பாடம் முடியும் போதும் நிச்சயம் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் சார்ட் பேப்பரில் படம் வரைதல், படம் ஒட்டுதல் உள்பட பல்வேறு செயல் முறை பயிற்சி இருக்கும். இதன் பின்னரே அடுத்த பாடம் செல்வார்கள்.
பயிற்சிகளை அதிகரித்தல்
உதாரணத்திற்கு சாலையில் ஓடும் வாகனங்கள் என்றால். அந்த வாகனங்கள் எவை எவை எப்படி செயல்படுகின்றன என்பது போன்ற பல்வேறு கேள்விகளை குழந்தைகளை பெற்றோரிடம் கேள்வி கேட்க வைப்பார்கள். இதன் மூலம் நிறைய பதில்களை குழந்தைகள் அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பாடத்தை படிக்க முடியாமல் அவதிப்பட்டால் அதற்கான காரணங்களை அறிந்து படிக்க வைப்பார்கள். அதற்கு அவர்கள் பல்வேறு செயல்முறை பயிற்சிகளை குழந்தைக்கு கொடுப்பார்கள். மொத்தத்தில் மனப்பாடம் என்பது துளியும்இருக்காது. எல்லாமே சிந்தித்து படிக்கும் வகையிலும், செயல்வழிக்கல்வியாகவும் இருக்கும். இந்த சிஸ்டம் இங்கும் இருந்தால் எப்படி இருக்கும்.