எப்படி இருக்க வேண்டும் மத்திய பட்ஜெட்.? விவசாயிகள், வணிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து அலசல்
சென்னை: வேலைவாய்ப்பு, நீர் ஆதாரம், வேளாண் வளர்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் மத்திய பட்ஜெட் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டிலாவது ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.
நீர் சேமிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பயிர் காப்பீட்டு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகளும் தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே போல தங்களது தொழிலை ஊக்கப்படுத்த மேலும் பல சலுகைகள் தரப்பட வேண்டும் என ஜவுளி துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் வரிவிகிதங்களை எளிமைப்படுத்த வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறித்து பேசிய விவசாயிகள், தமிழத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த ஆறு, குளங்கள், ஏரிகள், நீர் நிலைகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
அது போல காப்பீட்டு திட்டத்தை சீரமைத்து தங்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஜவுளி துறையை பொருத்த வரை ஏற்றுமதியில் 4-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது இந்தியா. இது குறித்து பேசிய வணிகர் சங்க நிர்வாகிகள், நம்மை விட சிறிய நாடுகளான வியட்நாம், பங்களாதேஷ் போன்றவை ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் ஜவுளி துறை சற்று சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே மீண்டும் இழந்த இடத்தை திரும்ப, பெற ஜவுளி துறைக்கு ஊக்கம் தரும் வகையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் பற்றி பேசிய கோவை பம்ப்செட் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், நம் நாட்டை பொருத்த வரை கைதேர்ந்த வல்லுநர்கள் உள்ளனர். தொழில் ரீதியாக நாங்கள் புத்திசாலிகளே நம்மாலும் உலகத்தரத்துடன் போட்டி போட முடியும். குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா மறறும் வளைகுடா நாடுகளுக்கு மோட்டார் பம்புசெட்டுகள் நிறைய தேவைப்படுகின்றன. ஆனால் அங்கெல்லாம் சீனாவின் ஆதிக்கம் தான் உள்ளது.
நம் நாட்டு மோட்டார் பம்புகளை வெளிநாடுளுக்கு சென்று சந்தைப்படுத்தும் அளவிற்கு செயல்பட எங்களால் முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கென ஒரு குழு அமைத்து, வெளிநாடுகளில் எங்கள் பொருட்களை கண்காட்சி வைத்து சந்தைப்படுத்தி கொடுத்தால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றனர்.
கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6.8 சதவீதமாக சரிந்தது. பருவமழை கைகொடுக்காதது மற்றும் விவசாயம், தொழில் வளர்ச்சி பாதிப்பு போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாட்டின் பொருளாதார அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.