80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்!
சென்னை: 1980 களில் கானி நிலம் வைத்திருந்தவர்கள் இன்று கல்வி வள்ளல்கள் ஆகவும், கல்வி தந்தையாகவும் ஆகி இருக்கிறார்கள். அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆரம்பித்தவர்கள், இன்று மிகப்பெரிய சிபிஎஸ்இ பள்ளிகளுடன் கல்வி தந்தைகளாகவும் வள்ளல்களாகவும் ஆகிவிட்டார்கள். அதைப் பற்றிய கதைதான் இது...
உங்கள் மகனை, மகளை சேர்க்க முடியவில்லையே என இன்று நீங்கள் அண்ணாந்து பார்க்கும் மிகப்பெரிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எல்லாம் மிக சாதாரணமாக இருந்தவை தான். .
அப்படி பள்ளிகளை நடத்தி வந்தவர்கள் எப்படி மிகப்பெரிய கல்வி வள்ளல்கள் ஆனார்கள் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றியது. அதனால் தான் இந்த கட்டுரையை இப்போது எழுதுகிறேன்.
பள்ளிகள் அதிகரிப்பு
1980களில் முதல்வர் எம்ஜிஆர், மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நிலம் வைத்திருக்கும் வணிக நோக்கம் இல்லாத சங்கங்கள், மற்றும் டிரஸ்டுகளுக்கு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் துவங்கி நடத்த அனுமதி அளித்தார். அதற்கு முன்பே பல பள்ளிகள் இருந்தாலும். எம்ஜிஆர் ஆட்சிக்கு பிறகே கல்லூரிகளும் பள்ளிகளும் பெருகின என்பதால் அவர் பெயரை குறிப்பிட வேண்டியுள்ளது.
மெட்ரிக் பள்ளிகள்
1980 வரை பள்ளிகளின் எண்ணிக்கையோ, கல்லூரிகளின் எண்ணிக்கையோ மிகக்குறைவு, வசதி உள்ளவர்கள், அரசு உதவி பெரும் பள்ளிகள் நடத்துபவர்களுக்கு தாராளமான அனுமதி வழங்கப்பபட்டது. ஆரம்பம் முதலே இவர்கள் சிறப்பான கல்வியை கொடுத்து வருகிறார்கள்.
மொத்த பள்ளிகள்
தமிழகத்தில் 2015 நிலவரப்படி, 6392 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதேபோல் 1802 பள்ளிகள் அரசு உதவி பெரும் பள்ளிகள். அதேபோல் தனியாருக்கு சொந்தமாக 4188 பள்ளிகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 335 மத்திய பள்ளிகள் உள்பட 12282 பள்ளிகள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 2015ம் ஆண்டு நிலவரப்படி, 1096 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி நிறுவனங்கள்
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நான் இப்போது இந்த கட்டுரையில் சொல்ல வருவது புள்ளி விவரங்களை பற்றி அல்ல. அதனால் இத்துடன் புள்ளிவிவரங்களை நிறைவு செய்து கொள்வோம். இப்போது சொல்ல வருவது டிரஸ்ட் என்ற பெயரில் சாதி சங்கங்கள் பெயரிலும் உருவான அரசு உதவி பெரும் பள்ளிகள், இன்று மிகப்பெரிய வணிக நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன. அதைப்பற்றியது தான்.
2005க்கு பிறகு
நான் படித்த 90களில் இருந்த 2003 வரையிலான காலகட்டத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. என் ஆசிரியர் மகனும், நானும் ஒன்றாகவே அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் 2005க்கு பிறகு மிகப்பெரிய அளவில் அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் வளர மற்றும் உருவாக தொடங்கின. அரசு உதவி பெறும் பள்ளிகளை நடத்தி வந்தவர்கள் மற்றும் சங்கங்கள், ஆங்கில மோகத்தை புரிந்து கொண்டு சட்டென மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பித்தார்கள்.
நீட் பிரச்னை
ஊடக வளர்ச்சியாலும், ஆங்கில மோகத்தால் மக்கள் குவிந்ததாலும் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மெட்ரிக் பள்ளிகள் வளர்ந்துவிட்டன. 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சமச்சீர் கல்வி சிறந்த கல்வியா, சிபிஎஸ்இ கல்வி சிறந்த கல்வியா என்பதை விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு பின், நம் கல்விமுறையை தமிழக அரசு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியது. இதுஒருபக்கம் ஒதுக்கிடுவோம். எனினும் உங்க பிள்ளை டாக்டராக வேண்டுமா? ஐஐடியில் படிக்க வேண்டுமா? எங்க சிபிஎஸ்இ பள்ளிக்கு வாங்க என கூப்பிட்டதால், ஓடிப்போய் முதல் வரிசையில் சீட் போட்டார்கள் நம்மவர்கள்.
நுழைவுத் தேர்வுகள்
இதன் காரணமாக அரசு உதவி பெரும் நடத்துனர்கள் இப்போது 2015ம் ஆண்டுக்கு பிறகு சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.நீட் தேர்வு காரணமாக எல்லா ஊர்களிலும் கல்வி வள்ளல்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூன்று வகையான பள்ளிகளை நடத்த தொடங்கியிருக்கின்றன. காரணம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால் தான் எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட், என்ஜினியரிங் படிப்புக்கான ஐஐடி, ஐஐஎம் நுழைவுத்தேர்வுகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை.இதன் காரணமாக முன்பு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணங்கள் சாதாரண சிறிய ஊர்களிலேயே ரூ.60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வள்ளல்கள்
இதன் மூலம் கல்வி நிறுவனங்களும், கல்வி வள்ளல்களும், கோடிகளை குவித்து வருகிறார்கள். இல்லாதவர்களுக்கு அரசு பள்ளி, கொஞ்சம் உள்ளவர்களுக்கு, அரசு உதவி பெரும் பள்ளிகள், நடுத்தர வர்க்கம் மெட்ரிக் பள்ளி, பணக்காரர்கள் சிபிஎஸ்இ பள்ளி என பிரித்துள்ளார்கள், ஒரே கல்வி நிறுவனத்தில்... 1980களில் அல்லது அதற்கு முன்பு காணி நிலம் இருந்ததால் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்த வணிக நோக்கம் இல்லா சங்கங்கள், டிரெஸ்டிகள், இன்று தரமான கல்வியை நாங்கள் தான் கொடுப்போம் என்ற நம்பிக்கையை 'மார்க்கெட்டிங்' மூலம் மக்களிடம் விதைத்தார்கள். இதனால் அவர்கள், இன்று கல்வி தந்தைகளாக வலம் வருகிறார்கள். இவங்க செஞ்சது ஒன்ணு தான், மார்க்கெட்டிங்.... மார்க்கெட்டிங்.!