வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. சாதியத்தின் மீது ஏரோப்பிளேனை இறக்கிய "சூரன்" சூர்யா.. வெல்டன்
சென்னை: ஏர் டெக்கானின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு இருக்கும் சூரரைப்போற்று படம்.. ஒரு பயோகிராபி படமாக மட்டுமின்றி, சாதியத்தின் மீதும், பிற்போக்கு கோட்பாடுகளின் மீதும் கல்லெறியும் வலுவான படமாகவும் உருவெடுத்துள்ளது!
இது ரிசர்வ் கம்பார்ட்மெண்ட் தானே.. நாத்தம் சகிக்கல.. கருவாட்டை எல்லாம் ரயில்ல கொண்டு வந்துகிட்டு.. என்று ஆதிக்க மனப்பான்மையோடு பேசும் உயர்சாதி முதியவரிடம் கருவாடு கூடை வைத்திருக்கும் பெண்.. நாங்க இனி ரயில்ல போக மாட்டோம்.. நீயே போ என்று நெத்தியடி வசனத்தில் ஆரம்பிக்கிறது சூரரைப்போற்று படத்தின் அரசியல்!
அந்த நொடியில் இருந்து படத்தின் இறுதி காட்சி வரை, ஜாதி அரசியல், பெண் விடுதலை, கம்யூனிசம், சோஷலிசம், நவீன தீண்டாமை என்று பல விஷயங்களை தொட்டு சென்றுள்ளது... சூரரைப்போற்று!
ஹீரோ என்ட்ரி
படத்தில் ஹீரோ நெடுமாறனை ஹீரோயின் பூமி பார்ப்பதே சாவு ஊர்வலத்தில் இருந்துதான். சாவு ஊர்வலத்தில் "மேல் சாதி காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா'' என்று ஜாதியத்திற்கு எதிராக நெடுமாறன் பாடி வரும் போதுதான் பூமி அவரை பார்க்கிறார்.. இந்த ஒரு காட்சி என்று இல்லாமல் படத்தின் நெடுக ஒவ்வொரு வசனமும், காட்சிகளும் எதோ ஒரு வகையில் தீண்டாமைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறது.
அந்த கட்சி
ஜாதி எப்படி ஏற்றதாழ்வுகளை உருவாக்குகிறது என்பதை மட்டும் காட்டாமல் மக்கள் இடையே பொருளாதார வெறுப்படைய எப்படி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது, அதிகாரம் எப்படி மக்களிடம் பாரபட்சம் காட்டுகிறது, பெண் சமத்துவம் என்று.. இந்த படம் பேசாத சமுக பிரச்சனைகளே இல்லை... ஹோட்டல்ல வேலை பாக்குறவனும் இதே டாய்லட்தான் யூஸ் பண்றானா, அவனை வேலையை விட்டு தூக்கு என்று ஆணவத்தில் பேசும் ப்ரேஷுக்கு கடைசி சீனில் மாத்திரை எடுத்து கொடுப்பதே ஒரு வேலைக்காரர்தான்!
ஜாதியை உடைக்கவில்லை
நான் பொருளாதார ஏற்றத்தாழ்வை (cost barrier) மட்டுமல்ல, கொடிய சாதிய ஏற்றத்தாழ்வையும் (caste barrier) உடைத்தெறிய விரும்புகிறேன் என்று வெளிப்படையாக சூர்யா பேசும் வசனங்களும் சரி.. நீங்க எல்லாம் socialite.. நான் சோஷியலிஸ்ட் என்று ஊமை குத்து வசனங்களும் சரி.. அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் வகையிலேயே அமைந்துள்ளது.
ஹேண்ட் சானிடைசர்
யார் கை கொடுத்தாலும் ஹேண்ட் சானிடைசரை பயன்படுத்தும் வில்லனுக்கு தோளில் தட்டிக்கொடுக்கும் நெடுமாறன்.. வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. போனை வைடா என்று ஒரே அடியாக முகத்தில் குத்தும் பொளேர் வசனங்கள் என்று இந்த படம் கோலிவுட்டில் புதிய உயரத்தை தொட்டு இருக்கிறது. ''கார்ல போறவன்தான்.. மத்தவனுக்கு எதுக்கு கார்ன்னு கேட்பான்'' என்று நவீன தீண்டாமையை கேள்வி எழுப்பி இருக்கிறது இந்த படம்.
ஜாதி மட்டுமில்லை
ஜாதி மட்டுமின்றி பெண் சமத்துவம் குறித்தும் பேசி உள்ளது.. உன் காசு, என் காசு எல்லாம் வித்தியாசம் இல்லை. என் கனவு உன் கனவுக்கு குறைச்சது கிடையாது, நான் நடத்துற பேக்கரிதான் நமக்கு சோறு போடுது என்று பூமி பேசும் வசனங்களும் சரி.. விமான சேவைக்கு பூமியை உணவு காண்ட்ராக்ட் ஒப்பந்தத்தில் நெடுமாறன் உடனே சேர்த்துக் கொள்வதும் சரி என படம் நெடுக பெண்களுக்கான குரல் பல இடங்களில் சத்தமாக ஒலிக்கிறது... வானம் மீது காதலோடு இருக்கும் நெடுமாறன்.. ஹீரோயின் பூமியோடு காதல் கொள்ளும் காட்சிகள்.. லவ்லி!
எல்லோரும் எல்லாமும்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.. இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக படம் சொல்லி இருக்கிறது.படத்தின் வசனங்களை எழுதியது உறியடி இயக்குனர் விஜயகுமார்.. முதல் படத்திலேயே ஜாதியத்தை தோலுரித்த விஜயகுமார்.. இந்த படத்தில் புதிய உச்சம் தொட்டு இருக்கிறார். நீ என்னடா எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கிறது.. நான் இந்த பிளாட்டுக்கு ஓனர்டா என்ற வசனம் எல்லாம் கூஸ்பம்ஸ் ரகம்!
வாழ்க்கை
ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் இத்தனை அரசியல் பேச முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது சூரரைப்போற்று. நிஜத்தில் மட்டுமல்ல.. நான் படத்திலும் அரசியல் பேசுவேன் என்று சூர்யா இன்னும் ஒருமுறை நிருபித்து உள்ளார். வரிசையாக பிளாப் கொடுத்த சூர்யாவிற்கு இதைவிட பெரிய கம் பேக் கொடுக்க முடியாது.. அவரின் சினிமா கேரியரில் இது டாப் நாட்ச் படமாக அமைய போகிறது.
சுதா கொங்கரா
பல அரசியல் விஷயங்களை தொட்டு இருந்தாலும்.. ஆரவாரம் குறையாமல் நேர்த்தியாக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் சுதா கொங்காரா. அசுரரை கொண்டாட தொடங்கி உள்ள தமிழ் சினிமாவின் டிரெண்டிற்கு இந்த படம் புதிய பாய்ச்சல் கொடுத்துள்ளது. இறுதிசுற்றுக்கு பின் இன்னொரு ஹிட் பார்சல்! பெயருக்கு ஏற்றபடி.. வஞ்சிக்கப்படும் சூரர்களைப் போற்றி.. தமிழ் சினிமாவின் இன்னொரு அசுரனாக உருவெடுத்துள்ளது.. சூரரைப்போற்று!