நிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக?
திமுக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது
சென்னை: நிறைய சிக்கல்களுடன் காணப்படுகிறது திமுக கூட்டணி.. தேர்தல் சமயத்திற்கு முன்பாகவே இதை சரி செய்து சிக்கல்களை நீக்காவிட்டால் கூட்டணியின் ஸ்திரத்தன்மை சிக்கலாகி விடும் என்ற சூழலே காணப்படுகிறது.
என்னதான் தமிழகத்தில் இப்போதைக்கு திமுகதான் வலிமையுடன் இருந்தாலும் கூட அந்த வலிமையை சிதைக்க ஏகப்பட்டவை நாலாபுறமும் நடக்கத்தான் செய்கிறது.
அதை திமுகவுமே கூட மறுக்க முடியாது. இந்த நிலையில்தான் தனது சொந்த பலம் மட்டுமல்லாமல் கூட்டணி பலத்தையும் பரிசோதித்து ஓவர்ஹால் செய்து சரி செய்தாக வேண்டிய நிலையில் அது இருக்கிறது.
பொறுப்பு
முன்பு கருணாநிதி இருந்தவரை அவரே எல்லாவற்றையும் கிட்டத்தட்ட செய்து வந்தார். அதாவது Lead from front என்று சொல்வார்களே.. அதுபோல தலைமைத்துவத்தில் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் என எல்லாமே கருணாநிதியிடமிருந்து வந்ததால் அதை அமல்படுத்தும் பொறுப்பில் மட்டுமே அவருக்கு அடுத்து இருந்த தலைவர்கள் இருந்தனர்.
ஆலோசனை
முடிவு எடுப்பதை விட அமல்படுத்துவது ரொம்ப எளிதானது... அது சொன்னதைச் செய்வது என்று இருப்பதால், தலைவர் என்ன சொல்கிறாரோ அதை செய்து விடுவார்கள் அடுத்த நிலை தலைவர்களும், நிர்வாகிகளும். மற்ற அரசியல் தலைவர்களை விட கருணாநிதி சற்று தனித்துவம் மிக்கவர். அவரும் மற்ற தலைவர்களைப் போலவே நிறைய பேரிடம் ஆலோசனை கலப்பவர்தான். காது கொடுத்து கருத்துக்களை கேட்பவர்தான். ஆனால் முடிவு மட்டும் அவர்தான் சுயேச்சையாக எடுப்பார்.
தனித்திறமை
கருணாநிதி முடிவு எடுக்கும்போது தனது காதுக்கு வந்ததை மட்டுமல்லாமல் தனது மூளைக்கு என்ன தோன்றுகிறதோ அதையும் சேர்த்தே கணக்கில் எடுத்து தெளிவாக முடிவெடுப்பார். அரசியலில் இன்று என்ன என்பதை ஓரளவு கணித்து விடலாம்.. ஆனால் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் கருணாநிதி தெளிவாக கணிப்பார். அதுதான் மற்ற தலைவர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டி நிறுத்தியது.
தோழர்
இன்று திமுகவில் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நல்ல ஆலோசகராக, உற்ற தோழராக கருணாநிதிக்கு விளங்கி வந்தார். இதனால் கருணாநிதிக்கும் கூட பணிகள் எளிதாகவே இருந்தது. தேவையான நேரத்தில் நறுக்கென தனது கருத்தை எடுத்து வைக்க அன்பழகன் தயங்க மாட்டார். சரியான கருத்தாகாவும் அது இருக்கும். ஏற்கக் கூடியதாகவும் அது இருக்கும். இன்று அன்பழகன் சுகவீனமாக இருக்கிறார். செயல்பட முடியாத நிலையிலும் உள்ளார்.
குழப்பங்கள்
இந்த இரு பெரும் தலைவர்களும் இல்லாமல், ஆக்டிவாக இல்லாமல் இருப்பது திமுகவுக்கு நிச்சயம் பெரிய பலவீனமாகும்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறமையாகவே செயல்படுகிறார்... அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் நிறைய குழப்பங்கள் அதன் பின்னால் இருக்கிறது... திமுகவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு புதிதாக ஆலோசகர் ஒருவரை பகிரங்கமாகவே நியமித்துள்ளனர்... இதற்கு முன்பும் கூட ஆலோசகர்கள் இருக்கத்தான் செய்தனர்... சோ கூட ஆலோசனை கூறியிருக்கிறார் கருணாநிதிக்கு.. ஆனால் பிரஷாந்த் கிஷோர் அப்படி இல்லை... அவரது ஆலோசனைப்படிதான் கட்சியே செயல்படுகிறது.
சறுக்கல்கள்
இப்படி ஒரு தனி நபரின் ஆலோசனைப்படி கட்சி செயல்படுவது என்பது அதுவும் தமிழகத்தின் அசைக்க முடியாத திராவிட இயக்கத்தின் முக்கிய வேருக்கு ஆரியத்தின் ஆலோசனையா என்று பலரும் பகிரங்கமாகவே கிண்டலடிக்கின்றனர். இது நிச்சயம் திமுக தலைமையின் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம் என்பதே பலரின் ஆதங்கமாகவும் உள்ளது. கருணாநிதி காலத்தில் எப்படி செயல்பட்டாரோ அதே போல இப்போதைய தலைமையும் செயல்பட முயன்றிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
சமாளிப்புகள்
இது ஒருபக்கம்.. அடுத்து மூத்த தலைவர்கள் சிலருக்குள் ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுவும் கருணாநிதி காலத்து பிரச்சினைதான். ஆனால் அப்போது கருணாநிதி இருந்தார்.. சமாளித்தார். ஆனால் இப்போது மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு இதை கடந்து வருவார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. சில முன்னாள் அமைச்சர்கள் சரிவர இணக்கமாக செயல்படுவதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் தங்களது வாரிசுகளுக்கு முக்கியத்துவம் போதாது என்று வருத்தப்படுகின்றனராம்.
காங்கிரஸ்
அதேபோல கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஒருவித மனக்கசப்புடன் உள்ளனர். காங்கிரஸ் பக்கம் போனால் உள்ளாட்சித் தேர்தலில் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. அதை அழகிரியும் வெளிப்படையாக பேசி அது ஒரு சிக்கலானது. இந்த நிலையில், "அதிமுக, திமுகவிலும் தலைமை இல்லாததால் தமிழகமே அனாதையாக்கப்பட்டது போல் தவித்து வருகிறது" என காங்கிரஸ் எம்பி எம்கே விஷ்ணுபிரசாத் சர்ச்சையாக நேற்று பேசியிருக்கிறார்.
திருமாவளவன்
மறுபக்கம் ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சுக்கு திருமாவளவன் திருச்சியில் வைத்து கடுமையான பதில் கொடுத்துள்ளார். அதை விட முக்கியமாக எங்களது உதவி இல்லாமல் யாரும் முதல்வராக முடியாது என்றும் அவர் முழங்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து இதுவரை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இது தேர்தல் சமயத்தில் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடி மட்ட அளவில் திமுக பக்கம் எதிராக இருந்தால் கூட்டணி சுமூகமாக இருக்குமா என்ற கேள்வியும் வருகிறது.
கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக இயங்கி வருகின்றனர். எந்த அளவில் அவர்கள் இணக்கமாக உள்ளனர் என்று தெரியவில்லை. இடையில் ரஜினி வேறு பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் திமுக தரப்பு வலுவானதாக இருப்பதாக தோன்றினாலும் கூட இன்னும் சுதாரிப்பாக இருப்பது எதிர்கால கனவுகளுக்கு சரியாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது.