'2016' ரிப்பீட்.. அரசியலுக்கு வந்தார் ரஜினி.. கியரை மாற்றியாகனும் திமுக.. ஸ்டாலினுக்கு பெரிய சேலஞ்ச்
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் போலவே.. இப்போதும் ஒரு பெரிய சவால் திமுகவுக்கு முன்னால் வந்து நிற்கிறது.. ரஜினிகாந்த் என்ற பெயரில்.
இதை சமாளித்து திமுகவை அரியணையில் அமர்த்துவதில்தான், ஸ்டாலினின் ஒட்டுமொத்த அரசியல் அனுபவமும், திறமையும் அடங்கியிருக்கிறது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தலுக்கு வெறும் 4 மாதங்கள் முன்பு கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், திமுகவின் வெற்றிக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தி விடுவார் என்று கேட்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.
திமுக, அதிமுகவை விடுங்க.. ரஜினிகாந்த் சந்திக்க போகும் சவால்கள் என்ன.. எப்படி சமாளிப்பார்?
சிறிய திருப்பம்தான்
எம்ஜிஆர் ஆட்சி காலத்துக்கு பிறகு தொடர்ந்து ஒரே கட்சி மறுபடி மறுபடி ஆட்சியை பிடித்தது இல்லை என்ற நிலையை கடந்த சட்டசபை தேர்தலின்போது மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா. ஒருமுறை திமுக, மறுமுறை அதிமுக என்று வாக்களித்து வந்த மக்கள், மறுபடியும் 2016ல் அதிமுகவை அரியணையில் அமர்த்தினர். இதற்கு முக்கியமான ஒரு காரணம் கடைசி நேரத்தில் அரங்கேறிய ஒரு சிறிய திருப்பம்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், அதுதான் உண்மை.
கடைசி நேர மாற்றம்
எந்த கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று கணிக்க முடியாமல்தான் இருந்தது, 2016 அரசியல் களம். ஆனால் கடைசி நேரத்தில்தான், தேமுதிக, வைகோவின் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து மக்கள் நல கூட்டணி என்று அதற்கு பெயர் சூட்டினர். இத்தனைக்கும் இது திட்டமிட்ட கூட்டணி கிடையாது. கடைசி நேரத்தில்தான் விஜயகாந்த் கட்சி இந்த கூட்டணியில் இணைந்தது. கடைசிவரை அதிமுக கூட்டணியில் தங்களை சேர்க்குமாறு வாசன் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் முடியாமல் தான் இந்த கூட்டணியில் சேர்ந்தார்.
முன்னாள் முதல்வரான கருணாநிதி
இன்னொரு பக்கம் என்னவென்றால்.. கடைசி நேரத்தில் வைகோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். இத்தனை தடுமாற்றங்களுக்கு நடுவே ஒரு கூட்டணி அமைந்தது. ஆனால் இந்த கூட்டணிதான் திமுகவின் வெற்றி கனவுக்கு வேட்டு வைத்தது. முதல்வராக மறைந்திருக்க வேண்டிய கருணாநிதி, முன்னாள் முதல்வராக கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் கேட்டு நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் இந்த கூட்டணி தான் காரணமாக மாறியது.
ஒரு பந்து கூட போதும்
"ஒரு பந்து கூட ஆட்டத்தின் போக்கை மாற்றி விடக்கூடும்" என்று கிரிக்கெட் உலகத்தில் சொல்வார்கள். அதுபோலத்தான் அரசியலும். சின்ன சின்ன கட்சிகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும். மக்கள் நல கூட்டணி அப்படித்தான் செய்தது. தேர்தல் முடியும் போது அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இருந்த வாக்கு சதவீதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.
வாக்கு பிரிப்பு
பழம் நழுவி பாலில் விழும் என்று விஜயகாந்த் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று நம்பிக்கையோடு கூறி வந்தார் கருணாநிதி. ஒருவேளை அப்படி நடந்து இருந்திருந்தால், இந்த வாக்கு வித்தியாசம் அடிபட்டுப்போய், கருணாநிதி அரியணையில் அமர்ந்து இருக்கக்கூடும். தனியாக போட்டியிட்ட பாமக 5.3% வாக்குகளை பெற்று ஓட்டுகளை பிரித்தது. ம.ந.கூவில் இடம் பெற்ற, தேமுதிக 2.4 சதவீதம், மதிமுக 0.9 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் 0.8 சதவீதம் வாக்குகளை பெற்றனர்.
திமுக ஆட்சி கனவுக்கு வேட்டு
இந்த அடிப்படையில்தான், வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த முறை எப்படி மூன்றாவது அணி என்று மக்கள் நல கூட்டணி அமைந்ததோ அதேபோல இப்போது ரஜினிகாந்த் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாலே மதத்தில் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று ரஜினிகாந்த் கூட நம்பமாட்டார். ஆனால் வாக்குகளை பிரிப்பது மட்டுமே போதுமானது. திமுக ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விடலாம். இதன் மூலம் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம், அல்லது கூட்டணி ஆட்சிக்கான கதவுகள் திறக்கப்பட கூடும்.
ஸ்டாலினுக்கு கட்டாயம்
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள், ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை விரும்பக்கூடும். அப்படி செய்யும்போது திமுக கூட்டணியில் வாக்கு வங்கியில் கணிசமாக இழப்பு ஏற்படும். இதுதான் ஸ்டாலின் முன்னால் நிற்கக்கூடிய பெரிய சவால். விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொருவரையும் மிகவும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் இப்போது திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது இருக்கும் கூட்டணி லோக்சபா தேர்தலில் அபார வெற்றி பெற்ற கூட்டணி. எனவே இதிலிருந்து ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றாலும் அது திமுகவுக்கு இழப்பு என்பதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விஷயத்தில் மிகவும் தாராளம் காட்ட வேண்டிய நிலைமைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிரடிதான் உதவும்
இதையும் மீறி கூட்டணி உடையுமானால் 2016ஆம் ஆண்டு நடந்தது போல மறுபடியும் நடக்கும். அதற்கு ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார். வெறும் தடுப்பு ஆட்டம் மட்டும் போதாது. அதிரடி ஆட்டம் திமுகவுக்கு அவசியப்படுகிறது. பாமக போன்ற பிற கட்சி கூட்டணியில் இருக்கும் கட்சிகளை திமுக தனது பக்கம் இழுக்க முயற்சி செய்யும். இதன் மூலம், ஒரு வேளை தங்கள் கூட்டணி உடைந்தாலும் அதில் இழக்கக்கூடிய வாக்குகளை திமுக தக்க வைத்துக் கொள்ளக்கூடும். தடுப்பு ஆட்டம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தால், போன தேர்தல் போலவே, கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும். எனவே இனி திமுகவின் பார்வை அதிரடி பக்கம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்