டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்
Recommended Video
சென்னை: டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு வந்ததாலேயே மாதவரம் இரட்டை குழந்தைகள் பலியானதாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் தெரிவித்தார்.
கொளத்தூரைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் 7 வயது தீக்ஷாவும், தர்ஷனும் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெங்கு என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரு குழந்தைகளும் இன்று இறந்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
வீட்டில் சிகிச்சை
அப்போது அவர் கூறுகையில் அந்த இரு குழந்தைகளும் மிகவும் அபாய கட்டத்திலேயே எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 5 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வரப்பட்டது.
அபாய அறிகுறி
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழு சிறப்பான சிகிச்சை அளித்த போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இரு குழந்தைகளும் அபாய அறிகுறிகளுடன் வந்தனர்.
ரத்தம் வழியும்
எந்த குழந்தைக்கு அபாய அறிகுறிகள் வந்துவிடுகின்றனவோ அந்த குழந்தைக்கு நோயின் தாக்கம் அதிகளவில் இருக்கும். இரு குழந்தைகளும் டெங்குவில் வரக்கூடிய இரு சிக்கலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒன்று டெங்கு ஹேராஜிக் ஃபீவர் ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே உடலினுள் ரத்தம் வழிந்து, மூளையில் வழிந்து அபாயம் ஏற்படக் கூடியது.
இரட்டை குழந்தைகள்
மற்றொன்று டெங்கு ஷாக் அதாவது ரத்த கொதிப்பு ஆகும். அதாவது உடம்பில் உள்ள நீர் சத்தானது லீக்காகி தசைகளுக்கு உள்ளே சென்றுவிடுவது. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் குறைந்ததால் பிபி குறைவது. இந்த இரு அபாய அறிகுறிகளால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.
அபாய அறிகுறி
குழந்தைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை நாட வேண்டும். காய்ச்சல்தானே என அலட்சியம் வேண்டாம். அபாய அறிகுறி வந்துவிட்டால் அதை நிறுத்துவது சற்று சிரமம் ஆகும். சென்னையில் டெங்கு நோய் காரணமாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அரசர் சீராளர்.