கொரோனா நோயாளிகள் திடீர் இறப்பை எப்படித் தவிர்க்கலாம்? டாக்டர். முத்துச் செல்லக் குமார் ஆலோசனை
மருத்துவர். முத்துச் செல்லக் குமார் ஆலோசனை
சென்னை: கொரோனா நோயாளிகள் திடீர் இறப்பை எப்படித் தவிர்க்கலாம் என்று பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் ஆலோசனை வழங்கி உள்ளார்.
கொரோனா காரணமாக இறப்பைக் குறைக்க வேண்டும் என்றால், கோவிட் தொற்றால் ஏன் உடல் மோசமாக பாதிப்பு அடைகிறது? எப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, இறப்பு எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில், இறப்பிற்கான எல்லா காரணங்களும், முழு விவரங்களும் இன்னும் மருத்துவர்களுக்கே புலப்படவில்லை.
கோவிட் தொற்றால் இறப்பவர்கள் அனைவரையும் நாம் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்துவது இல்லை. இந்தக் காலகட்டத்தில், அப்படியொரு பரிசோதனையை செய்யவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பல்வேறு உடல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்பவர்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது இறந்துபோகிறார்கள்.
முதியவர்கள் இறந்துபோகிறார்கள், ஆண்கள் இறந்துபோகிறார்கள் என்று பொதுவான கருத்துகள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால், இதற்கு மாறாக, நோயே இல்லாதவர்களும் இறந்துபோகிறார்கள். இளம் வயதினரும் இறந்துபோகிறார்கள். பெண்களும், குழந்தைகளும்கூட இறந்துபோகிறார்கள்.
இது மருத்துவர்களைக் குழப்ப ஆரம்பித்தது. ஆக, இது குறித்து இரண்டுவிதமான ஆய்வு நமக்குத் தேவைப்படுகிறது.
ஒன்று: ஏற்கனவே பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட் தொற்று ஏற்பட்டு ஏன் இறக்கிறார்கள் என்ற ஆய்வு.
இரண்டாவது: எந்தவித உடல் நோயும் இல்லாத இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்ற ஆய்வு.
இது குறித்த ஆய்வுகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தான் இருக்கிறது, இந்தியா உட்பட! ஆனால், அனைத்து ஆய்வு முடிவுகளுக்கும் காத்திருந்து சிகிச்சை செய்ய இப்போது நேரமில்லை.
ஏன் திடீர் இறப்பு ஏற்படுகிறது?
கொரோனா உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதித்தாலும், உயிரிழப்பதற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்!
• Cytokine storm வந்து நுரையீரல் பாதிக்கப்படுகிறது. சுவாச பாதிப்பால், நுரையீரல் செயலிழப்பு ஏற்படும். சுவாசம் பாதிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால், இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம்.
• நேரடியாகவே இதயம் பாதிக்கப்பட்டு (Myocarditis) சீரின்றி இதயம் துடித்து, திடீர் இறப்பு ஏற்படலாம். அதேபோல, இதய ரத்த நாளங்கள் ரத்த உறைப் பொருட்களினால் அடைபடுகின்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கலாம்.
• திடீர் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இறப்பிற்கு காரணமாக அமையலாம். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் ரத்த உறை பொருட்களால் அடைபட்டு, மூளைத் தாக்கம் ஏற்படலாம். இதனால் இறப்பு சம்பவிக்கலாம். சில வேளைகளில், மூளையே நேரடியாக பாதிக்கப்பட்டு, இதயம், சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிகள் பாதித்து இறப்பை ஏற்படுத்தலாம்.
• DIC எனப்படும் நிலை ஏற்படலாம். இதில் ரத்த உறைபொருட்கள் அதிகரித்து உடலின் பல்வேறு உறுப்புகளின் ரத்த நாளத்தையும் அடைத்து, உறுப்புகளையும் பாதிக்கும். இதனாலும் பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பும் ஏற்படலாம். உறை பொருட்கள் வெகுவாகக் குறைவதால், சில இடங்களில் ரத்தக்கசிவுகளும் ஏற்படும்.
• Septic Shock என்ற நிலை ஏற்பட்டு, ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்பட்டும் இறப்பு ஏற்படலாம்.
• கணையம் பாதிக்கப்பட்டு நோயாளிக்கு பீட்டா செல்கள் நலிவடைவதால், புதிதாக நீரிழிவு நோயே ஏற்படலாம். Kwasaki disease போன்ற நோய் சிறுவர்களையும், இளைஞர்களையும் பாதித்து, உடலில் ரத்தக்கசிவுகள், அடைப்புகளை ஏற்படுத்தலாம். (Multi-system inflammatory syndrome in children - MIS-C) இவர்களுக்கு இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.
பரிசோதனைகள்
இதற்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்று கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
இப்படி, பல்வேறு பரிசோதனைகளையும் தீவிர சிகிச்சையிலுள்ள பெரும்பாலான நோயாளிக்கு செய்ய வேண்டியது இருக்கும்.
ரத்த அணுக்களின் பரிசோதனை
CBC
TC
DC
கல்லீரல் செயல்பாட்டை அறியும் பரிசோதனைகள்
LFT
சிறுநீரக செயல்பாட்டை அறியும் பரிசோதனைகள்
RFT
ELECTROLYTES
நெஞ்சுப்பகுதி பரிசோதனைகள்
X-RAY CHEST
CT CHEST
ரத்தம் உறைதலை அறிவதற்கான பரிசோதனைகள்
PT
INR/PT
APTT
FIBRINOGEN
PLATELETS
D.DIAMER
ரத்தம் ஆக்ஸிஜன் அளவுகளைக் கணக்கிடுதல்
ABG
ரத்த சர்க்கரை அளவுகளைக் கணக்கிடுதல்
Sugar level
HbA1c
இதய பாதிப்பை அறிவதற்கான பரிசோதனைகள்
TROPONIN
CPK
செப்டிக் பாதிப்பு/உடல் மோசமாகி வருவதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள்
Hscrp
Il-6
Procalcitonin
Lactate level
LDH
CRP
FERRITIN
ஒரு முறை அல்ல, பல முறை இப்பரிசோதனைகளைச் செய்ய வேண்டியது இருக்கும். ஏனெனில், இவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளவர்கள்.
சிகிச்சை
இதற்கு என்னென்ன மருந்துகள் கொண்டு சிகிச்சைகள் செய்யப்படுகிறது என்பது குறித்தும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
1. ஆரம்ப நிலை சிகிச்சைக்கு
PARACETAMOL
HCQ
AZITHROMYCIN
2. Il-6 தடுப்பாற்றல் மருந்துகள்
TOCILIZUMAB/SARILUMAB/SILTUXIMAB
OBINUTAZUMAB(BRUTON'S TYROSIN KINASE INHIBITOR)
3. பிளாஸ்மா (ஆன்டிபாடி மருந்து) சிகிச்சை
CONVALESCENT PLASMA
4. ஸ்டீராய்டு வகை மருந்துகள்
DEXAMETHSAONE
METHYL PREDNISOLONE
5. வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படும் மருந்துகள்
REMDESIVIR
FLAVIPIRAVIR
TAMIFLU
LOPINAVIR/RITONAVIR
6. தீவிர சிகிச்சைகள்
O2 THERAPY
NON INVASIVE PPV
CPAP/PEEP
INTUBATION
MECHANICAL VENTILATION
ECMO - செயற்கை சுவாசத்திற்கு பயன்படும் கருவிகளைவிட, நுரையீரல் - இதயம் என இந்த இரண்டு உறுப்புகளின் வேலையைச் செய்ய பயன்படும் எக்மோ கருவிகள் கொண்டு சில குறிப்பிட்ட நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.
7. நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள்
CEPHALOSPORINS-3RD GENERATION
PIPERACILLIN/TAZOBACTUM
CARBAPENEM
8. ரத்த அழுத்தத்தை சீராக்கப் பயன்படும் மருந்துகள்
VASOPRESSORS
IV FLUIDS
9. ரத்தம் உறைதலைத் தடுக்கும் / கரைக்கும் மருந்துகள்
LMWH
ENOXAPIRIN
Rtpa
APIXABAN
10. ஏற்கனவே உள்ள நோய்க்கான மருந்துகள்/சிகிச்சைகள்
COMORBIDITY MANAGEMENT
ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் என பல்வேறு நோய்க்கான மருந்துகள்/சிகிச்சைகள்.
இறப்பைத் தவிர்க்க / குறைப்பதற்கான வழிகள்
1. நோயை எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும். தொந்தரவே இல்லாதவர்கள்கூட, கொரோனா இருக்கலாமென சந்தேகப்படும் அல்லது உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் ஒருமுறை தொடர்பில் இருந்தால்கூட, உடனே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
2. கண்டுபிடித்த நோயாளியை ஆரம்பத்திலிருந்தே கண்காணிக்க வேண்டும். அவருக்கு ஒரு சில லேசான தொந்தரவுகள் இருந்தபோதும், இல்லை தொந்தரவுகளே இல்லாதபோதும், அவர் வீட்டில் கண்காணிக்கப்பட்டாலும், இளம் வயதினராக இருந்தாலும், எந்தவித முன் நோய்கள் இல்லாது இருந்தபோதும்.
3. முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்கள் என இவர்கள் அனைவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, கண்காணித்தபடி சிகிச்சையைத் தொடர வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால், யாருக்கெல்லாம் தொற்றால் இறக்க அதிக வாய்ப்பு உண்டோ, அவர்களை உடனடியாக அனுமதித்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இறப்பை பெருமளவு தடுக்கலாம்.
4. வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். அவர்களுக்கு வெறும் காய்ச்சல் மட்டும் பார்த்தால் போதாது. நாடித்துடிப்பு, சுவாச அளவு, ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் சதவீதம் ஆகியவையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
நாடித்துடிப்பு அதிகமானாலும், சுவாச அளவு அதிகரித்தாலும், ரத்த அழுத்தம் குறைந்தாலும், ஆக்ஸிஜன் சதவீதம் 94 % அளவிற்கும் கீழ் குறைந்தாலும், இவர்களை மருத்துவமனைக்கு கொண்டுபோக வேண்டும். இவர்களுக்கு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், குழப்பம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், நெஞ்சை அழுத்துவது போன்ற நிலை ஏற்பட்டு சிரமம் ஏற்படுதல் ஆகிய தொந்தரவுகளுக்கு ஆட்படுவார்கள்.
இவர்களது உடல் சீரான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு போகிறது என்பதையே இந்த அறிகுறிகள் தெரிவிக்கும். உடனே இவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுபோக வேண்டும்.
எனவேதான், வீட்டில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல என மட்டும் பிரத்தியேக ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாது, இப்படி வீட்டில் வீட்டிலிருந்து வருபவர்களை எதிர்நோக்கி, இவர்களுக்கென மருத்துவமனைகளில் படுக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
5. கொரோனா வைரஸ் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் என்றாலும், உயிரை காப்பாற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென காணலாம்.
6. வீட்டிலும், மருத்துவமனை கண்காணிப்பிலும் ஆக்ஸிஜன் அளவு லேசாக குறையும்போதே, எச்சரிக்கை மணி அடித்துவிட்டது என்று உணர்ந்து, மிகவும் விரைவாக செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
7. இவர்களுக்கு உடனடியாக, மார்பு சிடி ஸ்கேன், மற்றும் ABG எனப்படும் பரிசோதனையை செய்து, நுரையீரல் பாதிப்பு, சுவாச பாதிப்பு, ரத்த வாயுக்களின் அளவுகளை உணர்ந்து, உடனடியாக ஆக்ஸிஜன் சிகிச்சை, செயற்கை சுவாசம் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
8. உடலில் அதிக அழற்சி பாதிப்பு, Cytokine storm பாதிப்பு என ஏற்படுகிறதா என்பதை அதற்குரிய பரிசோதனைகளை உடனடியாக செய்து, ஸ்டீராய்டு வகை மருந்துகளை உடனடியாக கொடுத்து, அழற்சி பாதிப்பு குறைத்து உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
9. அதேபோல, இதயமும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். ஆக்ஸிஜன் ரத்தத்தில் குறைவதால் இதயம் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படலாம். இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழலாம். அல்லது வைரஸால் நேரடியாகவே பாதிக்கப்பட்டு, இதய தசை அழற்சியினால் இதயம் சீரில்லாமல் துடித்தும் மரணம் ஏற்படலாம்.
எனவே, இதயத்திற்கு ஆக்ஸிஜன் கிடைக்க சிகிச்சை அளிக்க வேண்டும். நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்கும்போதே, இதயத்திற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். எனவே, இதய ரத்த நாள அடைப்பைச் சீராக்க மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், இதயம் சீரில்லாமல் துடிக்கும்போது அதையும் சீராக்க, சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
10. பல்வேறு உடல் ரத்த நாளங்களிலும், ரத்த உறைதலினால் அடைப்பு ஏற்படும். (DIC - Diseminated intravascular coagulation) அதனை பல்வேறு ரத்தப் பரிசோதனைகள் மூலமாக அறிந்து உறைதலை தடுக்கும், கரைக்கும் மருத்துவ சிகிச்சைகள் செய்வதன் மூலம் சீராக்கலாம்.
11. ரத்தம் உறைதல், அதிக அழற்சி தன்மை, ரத்த அடைப்பு, உடலில் நிகழும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்களால் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம். (Multi organ failure). அதனையும் கண்காணித்துக்கொண்டே சிகிச்சையைத் தொடர வேண்டும்.
12. வைரஸ் பாதிப்பினால், செப்டிக் உடல் தளர்வு (Septic Shock) ஏற்படலாம். இவர்களுக்கு, ரத்த அழுத்தம் குறைவதுடன், உடல் தளர்வு ஏற்பட்டு மயக்க நிலையை அடைவார்கள். இவர்களுக்கு, ரத்த அழுத்தத்தை சீராக்கும் மருந்துகளைக் கொடுத்து இவர்களது உடலைச் சரி செய்ய வேண்டும்.
13. சிறுநீரகச் செயல்பாட்டை அறியும் பரிசோதனைகளைச் செய்து, சிறுநீரகப் பாதிப்பு என்றால், டயாலைசிஸ் செய்து சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பான மருந்துகளை கொடுக்க வேண்டும்.
14. கல்லீரல் செயல்பாட்டை அறியும் பரிசோதனைகளைச் செய்து, கல்லீரல் பாதிப்பு என்றால் பாதுகாப்பான மருந்துகளை கொடுக்க வேண்டும். அதனையும் பாதுகாக்க வேண்டும்.
15. 24 மணி நேர பரிசோதனைக்கூடமும் கூடவே இயங்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும்.
ஆகவே, இறப்பைத் தடுக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல,நோய்த்தொற்று ஏற்பட்ட ஒவ்வொரு தனி மனிதனுக்கும்,அந்த நபரைக் கவனிக்கும் (முதியவர்,குழந்தைகள் என்றால்)உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் உண்டு என்பதை மறக்கக் கூடாது.
கட்டுரையை எழுதியவர்:
பேராசிரியர். டாக்டர். சு. முத்துச் செல்லக் குமார்
சென்னை