கொரோனாவால் பறிபோகும் வேலைவாய்ப்புகள்.. சம்பளக் குறைப்புகள்.. எப்படி சமாளிக்கலாம்?
சென்னை: கொரோனாவால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு அதிகரித்துள்ளது. இதிலிருந்து சமாளித்து நம்மை தற்காத்து எப்படி செயல்படலாம். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Recommended Video
கொரோனா... இந்த ஒற்றை வைரஸ், வல்லரசு நாடுகள் துவங்கி, அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர் வரை கதற விட்டுள்ளது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையையும், பலர் சம்பளத்தையும் இழந்துள்ளனர். இது வேதனையான விஷயம் என்றாலும், ஆழ்ந்து யோசித்தால் கொரோனா பல நன்மைகளையும் செய்துள்ளது விளங்கும். மனிதகுலத்தை சரியான பாதையில் பயணிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஆரோக்கியம், சுகாதாரம், சிக்கனம், சுயக்கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது.
மாறிப் போன வாழ்க்கை முறை
வாழ்க்கை முறையை மாற்றிய கொரோனா, அனைத்திற்கும் மாற்று காண வேண்டிய அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது. பிழைப்புக்காக வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூருக்கு சென்றவர்களை தாய்மண்ணை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தங்கள் ஊரிலேயே பிழைக்க வழி உள்ளதை காட்டி உள்ளது. உதாரணத்திற்கு, கிராமத்தில் வேலை இல்லை என நகரத்தை நோக்கி ஓடியவர்கள் தற்போது ஊரடங்கால் பஸ்கள் இயக்கப்படாததால் விவசாய வேலைக்கு திரும்பி உள்ளனர்.
விவசாய ஆர்வம்
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் புதர் மண்டிகிடந்த நிலங்களை சீர்செய்து காய்கறிகள் பயிரிடும் பணியை செய்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களில் சிலர், ஊரடங்கு காலத்தில் தற்காலிக காய்கறி வியாபாரிகளாக மாறி உள்ளனர். பெண்கள் பலர் மாஸ்க் தயாரித்தலை சுயதொழிலாக ஆக்கிக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கொரோனா புதிய பலம் சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது.
சிக்கனம் கண்டிப்பாக தேவை
சம்பள குறைப்பை சந்தித்து இருப்பவர்கள், சிக்கனத்தை கடைபிடிப்பது ஏற்றதாக இருக்கும். உணவு பொருட்களை வீணடிக்காமல் இருப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும். குறைந்த அளவிலான தூரத்தை பயணிக்க வாகன பயன்பாட்டை குறைத்து, நடந்து செல்லலாம். இது எரிவாயு செலவை குறைப்பதுடன், உடற்பயிற்சியாகவும் அமையும்.
ஏன் கையை ஏந்த வேண்டும்
வேலை இழப்பும் கூட பலருக்குள் இருந்த திறமையை வெளிக் கொண்டு வந்து, பல சுயதொழில்களை உருவாக்கி உள்ளது. "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ", "வெறும் கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம் " போன்ற வரிகளின் அர்த்தத்தை கொரோனா நன்றாக புரிய வைத்து விட்டது.