அடுத்த மூவ்! இரட்டை இலை சின்னத்தை பெற.. மூத்த வக்கீல்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை..வெளியான பரபர தகவல்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என ஓ பன்னீர் செல்வம் இன்று காலையில் அறிவித்தார். இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் பிற கட்சி தலைவர்களை அவரது அணி சந்தித்து ஆதரவு கேட்க உள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில் இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் மூத்த வழக்கறிஞர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் திருமகன் ஈவெராவின் சகோதரர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுகவும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த முறை கூட்டணி கட்சியாக தமாகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்த அக்கட்சியின் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு? பரபரக்கும் அதிமுக!
ஓ பன்னீர் செல்வம் தரப்பும் போட்டி
இந்நிலையில் தான் இன்று காலை ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதாகவும் அறிவித்தார்.இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆதரிப்போம்'' என்றார்.
இரட்டை இலை முடங்க வாய்ப்பு
ஓ பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இருவரும் தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும்போது சின்னம் முடங்கும் வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் மகராஷ்ராவில் பிளவுப்பட்ட சிவசேனா கட்சியின் சின்னம் முடங்கியதுபோல் இரட்டை இலை சின்னமும் முடங்க வாய்ப்பு அதிகம் என அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.
ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை
இந்நிலையில் தான் சென்னையில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஓ பன்னீர் செல்வம் இன்று திடீரென ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைதேர்தலில் போட்டி என அறிவித்ததும், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
ஆலோசித்தது என்ன?
இந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இரண்டு அணிகளாக உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இருப்பினும் இதனை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவே தொடர்வதாக அவரது தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில் தான் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தை நாட முடியுமா?, சட்டரீதியாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தால் நமக்கு சாதகமான சூழல் அமையும் என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.