ஐஸ் வாட்டரை விடுங்க! R.O.வும் வேண்டாம்! பானை தண்ணீரில் இந்த 4 பொருளை போடுங்க! செம!
சென்னை: வெயிலுக்கு இதமாக பிரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டரை குடிக்க தோன்றுகிறதா! தண்ணீரை சுத்திகரிக்க ஆர்.ஓ.வை பயன்படுத்துகிறீர்களா? அதையெல்லாம் விட்டுவிட்டு இயற்கையாக தண்ணீரை சுத்திகரிப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில் மழையை எதிர்பார்த்த பல ஊர்களில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. ஏதோ வருண பகவான் மனமிறங்காமல் இருக்கிறாரே! வெயிலில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததுமே பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எடுத்து குடிப்பார்கள்.

இது அந்த நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். ஆனால் சில நேரம் தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டு சளி பிடித்தல், தொண்டை கட்டுதல் உள்ளிட்டவை நேரிட வாய்ப்புள்ளது.
மேலும் உடலுக்கு உஷ்ணத்தையும் அதிகரிக்கும். அதனால் சாதாரண தண்ணீரையோ அல்லது வெந்நீரையோ குடிக்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு பானை! அதில் தண்ணீர் ஊற்றி குடிக்கலாம். உடலுக்கும் நல்லது. முதலில் பானையை வாங்கி அதில் கல் உப்பு போட்டு வெளிப்புறமும் உட்புறமும் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மணலை போட்டு அதன் மேல் பானையை வைக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது பிரிமனையை பயன்படுத்தி அந்த பானையை வைத்துக் கொள்ளலாம். இப்போது ஆர்.ஓ. எனும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரமே இல்லாமல் தண்ணீரை சுத்தப்படுத்துவது எப்படி என்பது குறித்து இன்பா என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி பானையை சுத்தப்படுத்த கல் உப்பை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். அப்போதுதான் பானையில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதையடுத்து சுத்தமான தண்ணீரை பிடித்து வைக்கலாம். பிறகு ஒரு காட்டன் துணியில் சிறிதளவு வெட்டிவேர், தேய்ச்சான் கொட்டை, சீரகத்தை சேர்த்து மூட்டை போல் கட்டி தண்ணீரில் போட வேண்டும்.
பிறகு ஒரு லெமனை அப்படியே தண்ணீரில் போடலாம். இதனால் தண்ணீர் நன்கு வாசமாகவும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மேலும் உடலுக்கும் நன்மை பயக்கும். தேய்ச்சான் கொட்டை என்பது நீர் நிலைகளை தெளிய வைக்க அந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த தேய்ச்சான் கொட்டைக்கு சுத்தப்படுத்தும் சக்தி இருக்கிறது. இதனால் இதை தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம். இந்த தேய்ச்சான் கொட்டை உடல் உஷ்ணத்தையும் குறைக்கும். இந்த கொட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை தரும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை உள்ளது. சிறுநீர் எரிச்சலை போக்கும்.
வெட்டிவேர் நன்கு வாசனையை தரும். இதுவும் குளிர்ச்சியை தரும். இது மன அழுத்தத்தை போக்கும். வெட்டிவேர் சிறுநீர் போக்கை தூண்டும். காய்ச்சல் , வயிறு எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும். இது காலரா, வாந்தியை குணப்படுத்தும். வெயில் காலத்தில் அதிக வியர்வையால் ஏற்படும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அதை அரைத்து குளிக்கும் போது பூசிக் கொள்ளலாம். இப்படி வெட்டிவேருக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. எலுமிச்சையும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை உள்ளது. இந்த எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது.












Click it and Unblock the Notifications