தமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம்
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் எப்படி பதிவு செய்து பயணிப்பது? என்ன குழப்பம் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் இ பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் மற்றும் இ-பதிவு ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்றால், நாம் பதிவு செய்ததை செல்போனில் போலீசாரிடம் காட்டிவிட்டு பயணத்தை தொடர முடியும். தனியாக பிரிண்ட் அவுட் எடுக்க தேவையில்லை என்பதுதான்.
https://eregister.tnega.org என்ற வெப்சைட்டில் இ பதிவு செய்து கொள்ளலாம்.
கேள்விகள்
இந்த வெப்சைட் உள்ளே போனதும் மாவட்டத்திற்குள் அல்லது மாவட்டங்கள் இடையே பயணிக்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கும். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணிக்கிறீர்களா என்ற கேள்வியும் இருக்கும். உங்களுக்கு எது தேவையோ அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். செல்போனுக்கு வரும் ஓடிபியை பயன்படுத்தி, உள் நுழையலாம்.
காரில் 3 பேர்தான்
தனி நபர் பயணம் என்றால், பைக்கில் ஒருவருக்கும், கார்களில் 3 பேருக்கும்தான் அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 4 பேர் இருப்பார்களே. 3 பேருக்கு அனுமதியென்றால், யாரை விட்டுவிட்டு பயணிப்பது என்பது ஒரு குழப்பம். ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும்.
திருமண ஆப்ஷன்
மருத்துவ அவசரம், இறப்பு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு செல்ல விரும்புவோரும் ஆவணங்களை காட்டி பதிவு செய்யலாம் என்ற போதிலும், இன்று அந்த ஆப்ஷன் காட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிமுக குற்றச்சாட்டு
அதிமுக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இ - பதிவு முறை - தொடரும் குழப்பம்.
திருமணம், இறப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பயணத்திற்கு இ - பதிவு கட்டாயம் என அறிவிப்பு ( இ - பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பம். ) என்று கூறப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு
இதேபோல 2 மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும்போது தமிழகம் வழியாக பயணிக்க நேர்ந்தால் அதற்கு டிரான்சிஸ்ட் பாஸ் என்று ஒரு ஆப்ஷன் முன்பு இருந்தது. அதுவும் இப்போது காண்பிக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள 18004251333 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தொடர்பு கொண்டால் காத்திருப்பில் வைத்துவிட்டு கட் செய்து விடுவதால் மக்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியவில்லை.