தள்ளு வண்டி,தண்ணீர் வெடி- கருணாநிதி, விஜயகாந்தை விமர்சித்து ஜெ.விடம் அமைச்சர் பதவி பெற்ற விஜயபாஸ்கர்
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல் முறைகேடு வழக்குகளில் சிக்கி எந்த நேரத்திலும் அமைச்சர் பதவி பறிபோகலாம் என்ற நிலையில் தலைக்கு மேல் கத்தியை சுமந்தவராகவே இருந்தவர் மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சட்டசபையில் நாரசமாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே ஜெயலலிதாவிடம் அமைச்சர் பதவியை பரிசாக பெற்றவர்தான் சி.விஜயபாஸ்கர்.
சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம், சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தியதில் முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பணப்பட்டுவாடா விவகாரம் என சி.பி.ஐ, வருமான வரித்துறையின் பிடியில் ஏற்கனவே சிக்கியவர்தான் விஜயபாஸ்கர். இதற்காக பல முறை விசாரணைகளை குடும்பத்துடன் எதிர்கொண்டும் இருக்கிறார்.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
தற்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ27 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கி இருக்கிறார் விஜயபாஸ்கர். இன்று காலை முதல் விஜயபாஸ்கர், அவரது பினாமிகளான உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டசபையில் விஜயபாஸ்கர் பேச்சு
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சாதாரண எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்தார் விஜயபாஸ்கார். சட்டசபையில் ஒரே ஒருநாள் கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை இழிவாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே அமைச்சர் பதவியை தூக்கி கொடுத்தார் ஜெயலலிதா. அன்று முதல் விஜயபாஸ்கர் ஆட்டமும் ஆரம்பமானது.
கருணாநிதியை தள்ளுவண்டி என விமர்சனம்
2013-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சட்டசபையில் துணைநிலை நிதி மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்தது. விராலிமலை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயபாஸ்கருக்கும் பேச வாய்ப்பு தரப்பட்டது. விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவியை பெற்று தந்ததும் அந்த பேச்சுதான்.. அதன் விவரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் போராடி வெற்றிகண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணனை மருத்துவமனைக்கே சென்று ஆறுதல் சொல்லி, 15 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக அளித்த ஜெயலலிதா, காவலர்களுக்கெல்லாம் காவலராக விளங்குகிறார்கள். இதைக் கண்டு பொறுக்காத ஒரு தள்ளு வண்டி எனக்கு உடன்பாடில்லை என்று கட்டுரை எழுதுகிறது. காக்கிச் சட்டைகளுக்கு உயர்வு அளித்தால் களவாணிகளுக்கு எரிச்சல்தானே வரும். இது விஜயபாஸ்கர் பேச்சின் ஒருபகுதி. அப்போது முதல்வராக சபையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் அனைவரும் மேஜையைத் தட்டி விஜயபாஸ்கரின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதாவது முதுமையினால் அப்போது கருணாநிதி வீல் சேரில் பயணித்து வந்தார். அதனைத்தான் கிண்டலாக தள்ளுவண்டி என்று விஜயபாஸ்கர் கிண்டலடித்தார். இதைத்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரும் ரசித்து மகிழ்ந்தனர். இந்தியாவின் முதுபெரும் தலைவரான கருணாநிதியை இப்படி பேசக் கூடாது என அன்று விஜயபாஸ்கரை யாரும் தடுக்கவில்லை.
ஓபிஎஸ் சப்பை கட்டு
விஜயபாஸ்கரின் இந்த விமர்சனத்துக்கு அன்று தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விஜயபாஸ்கர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகத்தான் சொன்னார் என்று அன்றைக்கு சபை முன்னவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சப்பை கட்டு கட்டியதுதான் பெருங்கொடுமை. அத்துடன் ஓயவில்லை விஜயபாஸ்கரின் விமர்சனம். இன்னொரு கதை சொன்னார்.
தண்ணீரில் மூழ்கிய வெடி விஜயகாந்த்
அதில் கோயம்பேடு ஃபயர் ஒர்க்ஸ் என்று ஒரு கடை உள்ளது. இந்தக் கடையை மச்சான்கிட்ட விட்டுவிட்டு, முதலாளி 'ரவுண்டு'க்குப் போய்விட்டார். மச்சான்கிட்ட வெடி வாங்கி பற்றவைத்தாலும் சத்தமாக வெடிக்க வேண்டிய வெடி மொத்தமாக வெடிக்கவில்லை. வெடி எப்போதும் தண்ணீரிலேயே இருந்ததால் முழுவதும் நமத்துப் போய்விட்டது என்றார். அதாவது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுபோதையிலேயே இருப்பதாக குறிப்பிட்டு தண்ணீர் வெடி என்று கிண்டலாக பேசினார். இந்த பேச்சை கேட்ட ஜெயலலிதா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது அதைவிட கொடுமை.
பதவி கொடுத்த ஜெ.
விஜயபாஸ்கரின் இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு மறுநாள் 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆளுநர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில் சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதவியேற்கவிருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. கருணாநிதி, விஜயகாந்தை இழிவாக பேசிய ஒற்றை காரணத்துக்காகவே விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் அம்மையார் ஜெயலலிதா.