அரை மனசுடன் கூட்டணிக் கட்சிகள்.. ஜெயிப்பதில் சிக்கல் வருமா.. இக்கட்டான நிலையில் திமுக, அதிமுக!
சென்னை: கூட்டணி சமயத்தில் இடப் பங்கீடும், தொகுதிகளை முடிவு செய்வதிலும் ஏற்படும் துயரம் இருக்கே துயரம்... அந்த வேதனை.. அதைச் சொல்ல வார்த்தையே இல்லை. அதையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக வெற்றிக்காக போராடுகின்றன.
திமுக, அதிமுக.. தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளை விட இந்த இரு கட்சிகளுக்கும் இருக்கும் தலைவலி போல வேறு யாருக்கும் இருக்காது. காரணம் இரு கட்சிகளுமே இரு பெரும் அணிகளின் தலைவர்களாக இருப்பதால்.
கருணாநிதி இருந்த காலத்திலும் சரி, ஜெயலலிதா இருந்தபோதும் சரி, இடப் பங்கீடு தொகுதிப் பங்கீடு என எதுவாக இருந்தாலும் சற்றுத் திணறித்தான் போவார்கள். கூட்டணி வைக்காமல் தனித்தும் போட்டியிட முடியாது.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் விரும்பாதவர்கள் திமுக, அதிமுக கட்சிகள்.
கெஞ்சி தாஜா
எனவே முரண்டு பிடிக்கும் கட்சிகளை இழுத்துப் பிடித்து சரி இதை வச்சுக்கோங்க.. அடுத்த தடவை பார்க்கலாம்.. அதில் பார்க்கலாம்.. இதில் சமாளிக்கலாம் என தாஜா செய்து ஒரு வழியாக அவர்களை திருப்திப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இந்த முறையும் அப்படித்தான்.
கட்சிகளின் முரண்டு
இப்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. இதையே சுட்டிக் காட்டி கூட்டணிக் கட்சிகள் ரொம்பவே முரண்டு பிடிக்கத்தான் செய்கின்றன. ஆனால் கூட்டணியே இல்லாமல் கூட போட்டியிடும் அளவுக்கு தெம்பாகவே காணப்படுகிறது திமுக. அதிமுகவின் நிலைதான் அப்படி இல்லை. கூட்டணி வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. காரணம், திமுகவை விட அதிமுகவுக்கு உள்ள ஏகப்பட்ட "அக, புற" நெருக்கடிகள்தான்!
விரும்பியது கிடைக்குமா
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் அனைத்துக் கட்சிகளுமே இரட்டை இலக்கத்தில்தான் சீட் எதிர்பார்க்கின்றன. அதிலும் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தர திமுகவுக்கு மனசில் இடமிருந்தாலும், கையில் சீட் இல்லை. எனவே அதில் பாதிதான் கிடைக்கும் என்ற நிலை. இதனால் காங்கிரஸ் வட்டாரம் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளது.
கட்சிகள் அப்செட்
மதிமுக ரொம்பவே அப்செட். விரும்பியது கிடைக்காது என்ற சிக்கலில் அவர்கள் உள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இதே நிலைதான். கம்யூனிஸ்டுகளும் கூட எதிர்பார்ப்புக்கேற்ப கிடைக்காது என்ற நிலையில்தான் உள்ளனர். முஸ்லீம் கட்சிகளுக்கும் ஆளுக்கு 2 கிடைக்கும் சூழலே இருக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால் பல கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமே என்று திமுக அழுத்துவதாக சொல்கிறார்கள். இதனால் அவர்கள் வெதும்பிப் போய் உள்ளனராம்.
இதற்குத்தான் பாடுபட்டாயா பாலகுமாரா!
மறுபக்கம் திரும்பிப் பார்த்தால் அதிமுக.. பாமக எப்படியோ எதையோ செய்து 23 சீட்டோடு கிளம்பிப் போய் விட்டது. தேமுதிக ரொம்பவே நொந்து போய் இருக்கிறது. அதிகபட்சம் 10 சீட்டுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். இதற்காகவே பாடுபட்டாய் பாலகுமாரா என்று எல்லோரும் விஜயகாந்த்தைப் பார்த்து புலம்பும் நிலையில் அக்கட்சியினர் உள்ளனர்.
அரை மனசுடன் கட்சிகள்
பாஜகவுக்கும் பெருசாக கிடைக்காது என்று சொல்கிறார்கள். இதனால் அந்தக் கட்சியும் அரை மனசுடன்தான் உள்ளது. முக்கியத் தலைவர்களுக்கும் கூட நினைத்த தொகுதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள். கருணாஸ் கதி என்ன என்று தெரியவில்லை. தமிமுன் அன்சாரி நிலை புரியவில்லை. இப்படி அங்கேயும் புலம்பல்கள் அதிகம்.
இழுத்தால் தேர்.. இல்லாட்டி தெரு!
இப்படி இரு பெரும் கட்சிகளான திமுகவும் சரி அதிமுகவும் சரி கூட்டணிக் கட்சிகளின் புழுக்கத்திற்கு மத்தியில்தான் புழங்கும் நிலையில் உள்ளன. இவையெல்லாம் தேர்தல் சமயத்தில் உள்ளடி வேலைகளாக மாறுமா என்ற அச்சமும் திமுக, அதிமுகவிடம் இல்லாமல் இல்லை. ஆனால் சேர்ந்து இழுத்தால் தேர் .. காலை வாரி விட்டார் தெருவில்தான் நிற்க வேண்டி வரும் என்பதை கூட்டணிக் கட்சிகளிடம் திமுக, அதிமுக இரண்டுமே தெளிவாக சொல்லியிருப்பதால் இணைந்து செயல்படும் மன நிலைக்கே அனைவரும் வருவார்கள் என்று தெரிகிறது.
செம ஜாலி பார்ட்டிகள்
இவர்கள்தான் இப்படி.. மறுபக்கம் "வருத்தப்படாத வாலிபர் சங்க" உறுப்பினர்கள் போல மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் படு ஜாலியாக தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் பிரிக்கப் போகும் வாக்குகள்தான் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தல்.. செம கலாட்டா கல்யாணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.