அறநிலையத்துறையே இருக்காதா? அப்போ கோவில்களை பராமரிப்பது யார்? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
சென்னை : பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
அறநிலையத்துறையின் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டையும் உரிய சான்றுகளுடன் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்.. அண்ணாமலை
அறநிலையத்துறையே வேண்டாம்
இந்தப் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையே வேண்டாம் என்பதுதான் எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாடுகளை காணவில்லை. தமிழ்நாட்டில் கணக்கில்லாமல் கோயில்கள் இடிக்கப்படுகிறது, பக்தர்களின் காணிக்கைகளும் சுரண்டப்படுகிறது, கோயில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. புராதான கோவில் நகைகள் உருக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார் என்று தெரியவில்லை" என்று விமர்சித்தார்.
அமைச்சர் சேகர்பாபு பதில்
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உபயதாரரால் வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு, பல்லக்கை தனது தோளில் சுமந்து வலம் வந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, "பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் கோவில்களை பராமரிப்பது யார்? கோவில் இருக்கக்கூடாது என்கிறாரா? தெய்வங்களுக்கு நடக்கக்கூடிய பூஜைகள், புனஸ்காரங்கள் நடக்கக்கூடாது என்று பேசுகிறாரா என்று தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
தூங்குபவர் போல் நடிப்பவரை
மேலும் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அவர் எந்த குற்றச்சாட்டை சொன்னாலும், அதற்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கு மடியிலே கனமில்லை. அதனால் வழியிலே பயமில்லை. விமர்சனங்களை பற்றியும், குற்றச்சாட்டுகளை பற்றியும் கவலைப்பட வேண்டாம். குறைகள் என்றால் அதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுங்கள். வேண்டும் என்று குறை கூறுபவர்களை எந்த காலத்திலும், எந்த வகையிலும் திருத்த முடியாது தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
குறை சொல்பவர்களுக்கு பதில்
ஆகவே இது போன்ற ஆதாரமற்ற பேச்சுகள், பொதுவாக அள்ளி வீசுகின்ற அவதூறுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதாக இல்லை. குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டை கூறினாலும் அதற்கு பதில் சொல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை எந்நாளும் தயாராக இருக்கிறது என்பதை குற்றம் சொல்பவர்களுக்கு நான் பதிலாக கூற கடமைப்பட்டிருக்கின்றேன். கோவிலில் காணிக்கையாக பெற்ற பணத்தை செலவு செய்து தான் கூட்டம் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டுக்கு, எங்கு கூட்டம் நடைபெற்றது என்று சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பிட்டு நீங்கள் குற்றச்சாட்டு சொன்னால் அந்த குற்றச்சாட்டிற்குண்டான பதிலை நாங்கள் அளிக்க தயாராக இருக்கிறோம்.
துறையில் இருந்து உதவியாளரை கூட பெறவில்லை
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்கள் என்னென்ன வழி வகுத்திருக்கின்றதோ, எதற்கெல்லாம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்களோ அந்த வழிமுறைகளின்படிதான் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு தான் செலவுகளை செய்கிறோமே தவிர அநாவசியமாக எந்த செலவும் செய்யவில்லை. மிகைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம், இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து ஒரு உதவியாளரை கூட நான் பெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக இதுவரையில் ஒரு வாகனத்தை கூட என் சொந்த உபயோகத்திற்கோ, என் வீட்டு உபயோகத்திற்கோ பெறவில்லை.
அநாவசிய செலவுகள் இல்லை
இறையன்பர்களிடமிருந்து காணிக்கையாக வரப்பெறுகின்ற சொத்துகளை இறை அன்பர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையிலும், அவர்கள் பயன்படக்கூடிய வகையிலும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு தான் செலவிடவேண்டும் என்று கண்டிப்போடு உத்தரவிட்டு இருக்கிறார். அந்த உத்தரவின்படி, என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றதோ, அதன்படி தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆடம்பர, அநாவசியமான செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை.
ஆன்மிக புரட்சி ஆட்சி
எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு களவு போன 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது முதலமைச்சரின் கையில் இருக்கின்ற காவல் துறையால் தான். திமுக தலைமையிலான ஆட்சியை ஆன்மிக புரட்சி ஆட்சி என்றே சொல்லலாம். உண்ணாவிரதம், அறப்போராட்டம் நடத்துபவர்கள் குறிப்பிட்டு எந்த குறையை எங்கள் மீது சுமத்தினாலும், சுட்டிக்காட்டினாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தி.மு.க ஆட்சி தயாராக இருக்கிறது. எல்லா வகையிலும் புரட்சி ஏற்படுத்துகின்ற ஆட்சியை வேண்டும் என்றே குறை செல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.