"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
இப்படி பந்தாடப்பட்டு வருகிறதே ஒரு கட்சி என்று வேதனையுடன் கி வீரமணி கூறியுள்ளார்
சென்னை: மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி, இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது என்று வேதனையை வெளிப்படுத்தி விமர்சித்திருக்கிறார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள்.. அதிமுகவே 4 ஆக பிரிந்துள்ள நிலையில், பாஜகவிடம் அத்தனை பேரும் சரணடைந்து விட்டதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
விசிக திருமாவளவன் இதுகுறித்து பலமுறை செய்தியாளர்களிடம் பேசியதுடன், அதிமுகவுக்கும் அட்வைஸ் செய்து அலர்ட் செய்திருக்கிறார்.
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
திருமாவளவன்
"அதிமுக பாஜகவின் பினாமி கட்சி... பாமக பினாமி டீம்... பாஜக நேரடியாக இங்கே வளர முடியாது. அதிமுக, பாமகவை பயன்படுத்துகின்றனர். இங்கு பாஜக போட்டியிடுவதாகதான் அர்த்தம். மோடியும், அமித்ஷாவும்தான் தமிழகத்தை ஆள்கின்றனர். 10 வருட காலம் பட்டதெல்லாம் போதும்... எடப்பாடியும், ஓபிஎஸ்சும் வெற்றி பெறுவார்களா என்பதே கேள்விக்குறி. அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்கின்ற வலிமை திமுகவிற்கு மட்டுமே உண்டு..
பலஹீனம்
அதிமுக சிதறினால், அதனால் தங்களுக்கு நன்மை என்றே யாராக இருந்தாலும் நினைப்பார்கள்... அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.. காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும் " என்று அக்கறையும், உரிமையும் கலந்த வேண்டுகோளை பலமுறை அதிமுகவுக்கு விடுத்திருக்கிறார் தொல். திருமாவளவன்.
பொம்மலாட்டம்
அதேபோல, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணியும், இதுகுறித்து தன் கருத்தை சொல்லி வருகிறார்.. "பாஜக எதிர்கட்சிகளை ஒன்றிணையாமல் பிரித்தாளுகிறது. தமிழகத்தில் எதிர்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும் என்பதை யார் வரக்கூடாது என்பதை திட்டமிட்டு நடத்துகிறது பாஜக. 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்" என்று விடாமல் சொல்லி வருகிறார்
வீரமணி சுளீர்
இன்றுகூட, ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் வீரமணி. அப்போது, "ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம்... அதனால், இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.
அடமானம்
மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.... அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அதிமுக இருக்கிறது" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
குழப்பியடிக்கும் பாஜக
இன்று காலையில் இருந்தே அதிமுக கூடாரம் பரபரப்பாக காணப்படுகிறது.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு. நாகராஜன், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர்... இதனால், பாஜகவின் ஆதரவு எடப்பாடி தரப்புக்குத்தான் என்று பேச்சுகள் எழுந்தன.. ஆனால், இந்த சந்திப்பு முடிந்து அங்கிருந்து பாஜக தரப்பு புறப்பட்டு ஓபிஎஸ்ஸையும் சென்று சந்தித்தனர். இதையடுத்து, பாஜகவின் நிலைப்பாடு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், அதிமுகவையும் சேர்த்து குழப்பிவிட்டு வருவதாக சிலர் சொல்கிறார்கள்.. மேலும் சிலரோ, இரு தரப்பையும் சமாதானம் செய்யவே பாஜக முயன்று வருவதாக சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கி.வீரமணியின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.