போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு.. மனித உரிமை ஆணையம் விசாரணை.. சேலம் டிஐஜி-க்கு நோட்டீஸ்!
சென்னை: சேலத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரி மரணமடைந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், இந்த வழக்கு குறித்து சேலம் சரக டிஐஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.
குடிப்பழக்கமுடைய இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
கொரோனாவை விட சென்சார் முக்கியமாப் போச்சா.. என்னாச்சு இவங்களுக்கு ?
சரமாரியாக தாக்கினார்கள்
நேற்று மாலை கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முருகேசன் மற்றும் அவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த போலீஸார், முருகேசனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
பரிதாபமாக உயிரிழப்பு
இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால் இன்று அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகேசன் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் கைது
இந்த குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரி முருகேசன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித உரிமை ஆணையம் விசாரணை
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மனித உரிமை ஆணைய ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.