சென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்க்கு 10 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர். இதில் இருவர் கணவன்-மனைவி என்பது சிறப்பம்சமாகும்.
பதவியேற்ற 10 பேரில் நீதிபதிகள் கே.முரளிசங்கர், எஸ்.டி.தமிழ்செல்வி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கணவர்-மனைவி ஆவர்.
இருவரும் 1968ம் ஆண்டு பிறந்தவர்கள். சட்டப்படிப்பை முடித்து 1995ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி கே.முரளிசங்கர், 1985-1990ம் ஆண்டு கோவை அரசு சட்டக்கல்லூரியில் படித்தார். சட்டப்படிப்பை முடித்து விட்டு, கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வி, புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இருவரும் ஒரே நேரத்தில் மாஜிஸ்திரேட்டாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர்.
இருவருக்கும் காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வியும் பணியாற்றி வந்தனர்
இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில்.. கீழ் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் கணவன், மனைவி ஒன்றாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.