சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்!
மனைவி, குழந்தையை காணவில்லை என்று கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்
சென்னை: கட்டின மனைவியையும், பெத்த மகளையும் காணவில்லை என்று 10 நாட்களுக்கு பிறகு புகார் கொடுத்துள்ளார் ஒரு இளைஞர்.. இது சம்பந்தமாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஜாஃபார்கான் பேட்டை முனுசாமி தெருவைச் சேர்ந்த தம்பதி சம்பத்குமார் - பானு. இவர்களுக்கு விசாகா என்ற நான்கரை வயது மகள் இருக்கிறாள்.
இந்நிலையில், மெரினா போலீஸில் சம்பத்குமார் புகார் ஒன்றை தந்துள்ளார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது: திருச்சியில் வசித்து வரும் என்னுடைய தங்கை சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளிக்கு கலாந்தாய்வுக்காக வந்தார்.
அவரை கடந்த 13-ம் தேதி மனைவி பானு, ஸ்கூட்டியில் அழைத்து சென்றார். அப்போது என் குழந்தையையும் கூடவே அழைத்து சென்றார். ஆனால் கலாந்தாய்வு முடிய காலதாமதம் ஆகிவிட்டதால், எனது தங்கையை ஆட்டோ பிடித்து வரும்படி சொல்லிவிட்டு, குழந்தையை கூட்டிக் கொண்டு, பானு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
ஆனால் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு வரவேஇல்லை. பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார். சம்பவம் நடந்து 10 நாள் கழித்து இளைஞர் எதற்காக புகார் தருகிறார் என்ற சந்தேகம் போலீசார் தரப்பில் வலுத்துள்ளது.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காமராஜர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு புறம் சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.