எப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..!
மனைவியை கொன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "எப்ப பார்த்தாலும் ஓட்டல் சாப்பாடுதான் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. என் அம்மாவை கெட்ட கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டினாள், அதான் கழுத்தை நெறித்து கொன்று, தொங்கவிட்டு விட்டேன்" என்று கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை கிண்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ஒரு கார் டிரைவர். இவரது மனைவி இலக்கியா.. 24 வயதாகிறது.. கிண்டியில் உள்ள ஒரு மாலில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், கடந்த 30-ந் தேதி நடுராத்திரி இலக்கியா, வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினரும் இலக்கியாவை மீட்டு அருகில் இருந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இலக்கியா
இதையடுத்து, கிண்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது. இதனிடையே இலக்கியாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. அதில் இலக்கியாவின் மரணம் தற்கொலை இல்லை என்றும், அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அதற்கு பிறகுதான் சடலத்தை தூக்கில் தொங்கவிடப்பட்டுதாகவும் தெரியவந்தது.
கழுத்து நெறித்து கொலை
கிண்டி போலீசார், உடனடியாக கணவர் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மனைவியை தான்தான் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். மேலும் அவர் போலீசில் சொன்னதாவது: "நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய்விடுவோம்.
கெட்ட வார்த்தைகள்
இதனால் வீட்டில் சமைக்கிறதே இல்லை.. எப்பவுமே ஓட்டல் சாப்பாடுதான். தினமும் ஹோட்டலில்தான் சாப்பாடு வேண்டும் என்று இலக்கியா கேட்பாள். அது எனக்கு கட்டுப்படியாகல.. அதனால் சமையல் செய்ய, எங்கள் சொந்த ஊர் திருவண்ணாமலையில் இருந்து என் அம்மாவை வரவழைத்து கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்கு இலக்கியா ஒத்து கொள்ளவில்லை.
கைது
மேலும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் என் அம்மாவை திட்டினாள். அது தாங்க முடியாமல்தான், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு.. பிறகு சடலத்தை தூக்கில் தொங்கிவிட்டேன்" என்றார். இதையடுத்து கணவர் ஜெயராஜ் கைது செய்யப்பட்டதுடன், இலக்கியாவின் இந்த தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடந்து வருகிறது.