நாங்க சாகறோம்.. அவங்களை தொல்லை பண்ணிடாதீங்க.. ஒரே கயிற்றில் பறி போன இரு உயிர்கள்
சென்னை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: "நாங்க சாகறோம்.. ஆனால் அவங்களை மட்டும் தொல்லை பண்ணிடாதீங்க" என்று கணவன், மனைவி உருக்கமாக கேட்டுக் கொண்டதுடன், நைலான் கயிற்றில் ஒன்றாக தூக்கு போட்டு தொங்கிவிட்டனர்.
சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வந்தவர் சந்திரன் - விஜயலட்சுமி. இவர்களுக்கு அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.
இரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் சந்திரன், விஜயலட்சுமி தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டு வேலை செய்யும் சித்ரா என்ற பெண் வழக்கம்போல் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது கதவு திறந்து கிடக்கவும், பெட்ரூமுக்கு சென்று பார்த்தார்.
அங்கே தம்பதி இருவருமே நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு சடலமாக தொங்கியதை கண்டு அலறினார். இதையடுத்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தரப்பட, அவர்களும் விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். வீடு முழுக்க சோதனையும் செய்தனர். அப்போதுதான் சந்திரன் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது.
அதில் "நான் நிறைய கடன் வாங்கி விட்டேன். வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் மாசத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல தந்து வந்தேன். இனியும் என்னால், வட்டியும், அசலையும் தர முடியாத விரக்தியால்தான் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். ஆனால், எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன், மகளிடம் பணம் கேட்டு தொல்லை தர வேண்டாம்" என உருக்கமாக கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.
சந்திரன், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்து, அதற்கு பிறகுதான் அவருக்கு திடீரென கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். கடன் அதிகமாக இருந்ததால்தான், தன்னுடைய சொந்த வீட்டைகூட கடன்காரர்களிடம் தந்துவிட்டாராம். ஓட்டேரிக்கு குடிவந்து ஒரு வருஷம்தான் ஆகிறது என்கிறார்கள். தினம் தினம் நிம்மதி இல்லாமல் தவித்து வந்த நிலையில், தம்பதியின் இந்த முடிவு அந்த பகுதியில் சோகத்தை தந்துள்ளது.