ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் மின்சார கார் தயாரிக்கிறது ஹுண்டாய்.. ஒரு சார்ஜ்ஜுக்கு 350 கி.மீ பயணிக்கலாம்
சென்னை: இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கார் மாதிரியை, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கண்காட்சிக்கு வைத்துள்ளது அந்த நிறுவனம்.
ஹுண்டாய் கார் நிறுவனம், 'கோனா' என்ற பெயரில் இந்தியாவில் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்ரீபெரம்பத்தூர் தொழிற்சாலையில் இந்த கார் உற்பத்தியாகவுள்ளதாம்.
1 முறை சார்ஜ் செய்தால், 350 கி.மீ தூரம் பயணிக்க கூடிய இந்த கார் லித்தியம் பேட்டரி கொண்டது. பேட்டரிக்கு 6 வருடங்களுக்கும் மேலாக வாரண்டி தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டிலேயே சார்ஜ்
காரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்ய 39 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. காருடன் பேட்டரி சார்ஜரும் வழங்கப்படும். இதனால் வீட்டிலேயே காருக்கு சார்ஜ் செய்ய முடியும். பொதுவாக இந்த வகை கார்கள் அதிவேகமாக இயங்கக் கூடியதா அல்லது மெதுவாக ஓடக்கூடியதா எந்த சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால் இந்த கார், அந்த வகையிலும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துகிறது.
அதிவேகம்
ஆம்.. எந்தவித சத்தமும் இல்லாமல் அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லகூடியது இந்த கார். கிளம்பிய 7 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடிய வலுவான இயந்திரம் உள்ளது காரின் மற்றொரு சிறப்பம்சம்.
7 ஆயிரம் கோடி
இவ்வாண்டின் பாதிக்கு பிறகு, இந்த மின்சார கார் உற்பத்தி ஆரம்பிக்கப்பட உள்ளதாம். இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் ரூ.7 ஆயிரம் கோடியை ஹுண்டாய் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் கையெழுத்தானது.
ஸ்போர்ட்ஸ் லுக்
மின்சார கார்களை பார்த்ததுமே, எளிதாக அவரை பேட்டரி கார்கள் என்று அறியும் வகையில் இருக்கும். ஆனால் கோனா வகை கார் வழக்கமான கார் போன்றுதான் உள்ளது. எம்யூவி போன்ற விலை உயர்ந்த கார்களில் இருப்பதை போன்ற ஹெட்லைட்டுகளுடன், ஐ20 காரை போன்ற எஸ்யூவி தோற்றத்தில் உள்ளது கோனா.
வரவேற்பு
இந்த கார் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வருகை தரும் பொது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பலரும் இந்த கார் குறித்த விவரங்களை கேட்டறிவதை பார்க்க முடிகிறது. எரிபொருள் விலை நாளுக்குநாள் ஏறி வரும் நிலையில், இதுபோன்ற மின்சார கார்கள் மக்களுக்கு மிகுந்த பலனை கொடுக்கும். இந்த காரின் விலை ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.