விசாரணை சரியில்லை.. பாத்திமா மரணம் பற்றி மோடியிடம் பேச போகிறேன்.. தந்தை அப்துல் முடிவு!
எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன் என்று தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன் என்று தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் படித்து வந்த அவர், மனஅழுத்தம் மற்றும் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடு காரணமாக் தற்கொலை செய்து கொண்டார்.
பாத்திமா தற்கொலை வழக்கு சிசிபிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான தனிப்படை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த தற்கொலை தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை அப்துல் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எல்லோரும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்களை மட்டும்தான் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. குற்றவாளிகளை எதுவும் செய்யவில்லை. தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு செல்வேன். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறேன்.
திங்கள் கிழமை பிரதமர் மோடியை இது தொடர்பாக சந்திக்கிறேன். இந்த பிரச்சனை குறித்து அவரிடம் எடுத்து கூறுவேன். போலீசின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை, என்று பாத்திமாவின் தந்தை அப்துல் குறிப்பிட்டுள்ளார்.