ராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா? காங்-க்கு சீமான் பதிலடி
Recommended Video
சென்னை: ராஜீவ் காந்தி கொலை குறித்த தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி தந்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசினார் என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இதற்காக காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டதால் போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாக பேசிக் கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். வாழ வழியின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் போது கையில் உள்ளா குழந்தை வரை பயங்கரவாதியாக பார்க்கின்றனர்.
இந்த தடையால் சர்வதேச அமைப்பிடம் சென்று நீதி கேட்கும் போது தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகளாக பார்க்கின்ற போக்காக உள்ளது. 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள். காந்தியை நாங்கள் தான் கொன்றோம். கோட்சே தாமதமாக கொன்றுவிட்டதாக கூறும் போது ஏன் கோபப்படவில்லை. காந்தி உருவப்படத்தை சுட்டு போதும் ஏன் கோபப்படவில்லை. இதை எவ்வளவு காலத்திற்கு பேச போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஒருமைப்பாடு எங்கே கெட்டு போகும்
தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. காவிரி நதி நீரில் நிலைப்பாடு என்ன? ஆட்சியில் இருந்தபோது நதி நீரை பெற்று தர முடிந்ததா. மக்களை அடித்து விரட்டி கால்நடையாக தமிழகத்திற்கு வந்தபோது எங்கே சென்றார்கள். பேசுவதால் ஒருமைப்பாடு என்ன கெட்டுபோய் விட்டது.
அமைதிப்படை குறித்து விவாதிக்கலாமா?
ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? இதே தமிழக சட்டசபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படத்தை பச்சை குத்திக் கொண்டு எனது தம்பிகள் சட்டசபைக்கு செல்லும் காலமும் வரும்.
ராஜீவ் கொலைக்காக லட்சம் பேர் படுகொலை
விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்றால் நம்பிவிட்டார்களா. ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறி தான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள்.
போர் நடத்திய காங். திமுக
இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசு தான். காங்கிரசுடன் திமுக நின்றதை யாராவது மறுக்க முடியுமா. சத்தியத்தின் பக்கம் தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலசந்திரன் ராணுவ பிடியில் இருப்பதாக தகவல் சொன்னபோது பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்க கூடாது என்று சொன்னது யார்? அதே காயமும் வன்மமும் கொந்தளித்து கொண்டு இருக்கிறது. 10 ஆண்டுகளாக அநீதிக்கான நீதியை பெற கூட முடியவில்லை . அவ்வளவு தடை, இடையூறு. ஒரு மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர். என் மீது இதுபோன்ற லட்சக்கணக்கான வழக்குகள் இருக்கிறது. அதற்காக ராஜீவ் காந்தி குறித்து பேசியதை வாபஸ் பெறமாட்டேன்.
பாஜக, காங்கிரஸ் ஒன்றுதான்
பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாக தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்து கொடுத்தது தான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அணு அலை எதிர்த்து போராடினால் தேச துரோகி என 2 கட்சிகளும் சொல்கிறது. நீட் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பா.ஜ.க.
ஜிஎஸ்டியே காரணம்
நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது தான் காரணம். எல்லா திட்டங்களையும் இரண்டு கட்சிகள் தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜ.க. காவி கட்டிய காங்கிரஸ். இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. கொள்கையில் என்ன வேறுபாடு உள்ளது. ராமர் கோவிலை காங்கிரஸ் வந்து தான் கட்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறுகிறார். இரு கட்சிகளுக்கும் கல்வி, பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் ஒன்று தான். தனியார் மையம் கொள்கையில் இரு கட்சிகளுக்கும் என்ன மாற்று கருத்து உள்ளது. ரயில்வே துறையையும் தனியார் மையம் ஆக்கப்பட்டு வருகிறது. சீன அதிபர் வந்தபோது பிரதமர் தமிழகத்தில் நடப்பதால் வேட்டி கட்டியிருப்பார். தமிழன் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சி தான்.
இவ்வாறு சீமான் கூறினார்