கூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா?
அமமுக தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று அழுத்தமாக கூறி வரும் டிடிவி தினகரன், பாஜக தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு ரெடி என்பது போல பேசி வருகிறார்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணிக்குள் அமமுகவை கொண்டு வர பாஜக வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தனது நிலைப்பாட்டினை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார் டிடிவி தினகரன். அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுக, பாஜக வந்தால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதாவது அதிமுகவும், பாஜகவும் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகவே சொல்லி விட்டார்.
திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க எந்த அம்பையும் எய்யத் தயார் என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன், தேர்தல் நெருங்குகிறது. எங்களின் ஒரே இலக்கு திமுகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதுதான். திமுகவை எதிர்க்கிற அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையில் வந்தால் ஏற்கத் தயார் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார்.
இதைக்கேட்ட அமைச்சர் பாண்டியராஜன், அமமுக தலைமையில் கூட்டணி என்பதெல்லாம் நடக்காத காரியம், டிடிவி தினகரன் காமெடி செய்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் சதுரங்கம் தமிழகத்தில் பரபரப்பாகவே ஆரம்பமாகி விட்டது.
சசிகலாவின் நிலை
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்துள்ள சசிகலா மவுனம் காத்து வருகிறார். சசிகலாவை அதிமுகவினுள் இணைத்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பும் நிலவிய நிலையில் அது நடக்கவே நடக்காது என்று அழுத்தமாக கூறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இரண்டும் ஒன்றாகுமா?
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அமமுக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலுக்கு தயாராகி வருகிறார் டிடிவி தினகரன். அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைத்து போட்டியிட வைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக தகவல் வெளியானது. அது நடக்காத காரியம் என்று கூறிவிட்டார் டிடிவி தினகரன்.
அந்த கதையாக இருக்கே
அமமுக அதிமுக இணைப்புக்கான நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் வாய் விட்டு சிரித்துவிட்டு, விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற மாதிரி இருக்கிறது என்று கூறி சிரித்தார்.
என் தலைமையில் கூட்டணி
அமமுக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வரும் டிடிவி தினகரன், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார். சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்த டிடிவி தினகரன், இப்போது தன்னை முதல்வராக முன்னிறுத்துகிறார். இது தமிழக வாக்காளர்களிடையே எந்த அளவிற்கு எடுபடும் என்பது தெரியவில்லை.
டிடிவி தினகரனின் திட்டம்
திமுகவை எதிர்க்கும் யாராக இருந்தாலும் எங்கள் தலைமையில் கூட்டணிக்கு வந்தால் பேசத் தயார் என்று கூறியுள்ள தினகரன், திமுகவை வீழ்த்த எந்த அம்பையும் எய்யத் தயார் என்று கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை மீட்போம் என்று கூறி வரும் தினகரன், தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவை கைப்பற்ற காய் நகர்த்தி வருவதாகவே தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதெல்லாம் நடக்கிறது காரியமா?
அதே நேரத்தில் டிடிவி தினகரனின் பேட்டிக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் அமைச்சர் மாபா பாண்டியராஜன். இதெல்லாம் நடக்கிற காரியமா? டிடிவி தினகரன் காமெடி பண்ணிட்டு இருக்கிறார். அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக போகிறது. அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார். குக்கர் விசிலடித்து இலை மலருமா? அல்லது கருகுமா பார்க்கலாம்.