"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்".. கனிமொழி சவால்
ஹிந்தி எனக்கு தெரியாது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்
சென்னை: "மொதல்ல புரூப் பண்ணுங்க.. நான் எந்த மேடையில் ஹிந்தியை மொழி பெயர்த்திருக்கேன்.. டெல்லிக்கு போய் இத்தனை வருஷம் ஆச்சு.. ஆனாலும் எனக்கு ஹிந்தி தெரியாது" என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
"உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியரா?" என்று சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் கேட்டுவிட்டதாக கனிமொழி கிளப்பிய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
கனிமொழி இவ்வாறு கூறியதற்கு பாஜக தரப்பில் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்... மற்றொரு பக்கம் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர், தனக்கும் ஒரு அனுபவம் அப்படி ஏர்போர்ட்டில் நடந்ததாக சொன்னார்.
பயணிகள்
இதனிடையே, ஏர்போர்ட்களில் மொழி சிக்கலை தவிர்ப்பதற்காக இனிமேல் பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று சிஐஎஸ்எப் டிஐஜியும் அறிவித்துள்ளார்... மேலும் பயணிகளின் உணர்வுகளை மதித்து கண்ணியத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், கனிமொழிக்கு நடந்ததை போல இனி ஒரு சம்பவம் நடக்காது என்று உறுதியாக இனி நம்பலாம்.
விவகாரம்
அதேசமயம், பாஜக விடுவதாக இல்லை.. இந்த விவகாரத்தை கனிமொழி அரசியலாக்க பார்க்கிறார்.. ஆதாயம் தேடுகிறார்.. என்று பாஜக தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது.. தமிழக பாஜக தலைவர் முருகன் சொல்லும் போது, "நாடறிந்த விஐபியான கனிமொழி விஐபி புரோட்டோகால்படி சிஐஎஸ்.எஃப் நபர்களிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை... ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு... அரசியல் செய்வதற்காக இந்த விவகாரத்தை கனிமொழி பெரிதுபடுத்தி பேசுவதாக தெரிகிறது என்றார்.
கனிமொழி
இந்நிலையில்தான் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இது சம்பந்தமாகவும் ஒரு விளக்கம் தந்தார்.. அவர் சொல்லும்போது, "சென்னை ஏர்போர்ட்டில் தமிழ்மொழி அதிகம் தெரிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது.. ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம்? ப.சிதம்பரம், குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கே இதுபோன்று நடந்துள்ளது என்று சொல்லி உள்ளனர்.
நிரூபியுங்கள்
நான் டெல்லிக்கு சென்று இத்தனை வருஷங்கள் ஆனாலும் ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லை.. தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கவில்லை.... எந்த பொதுமேடையிலும் நான் ஹிந்தி மொழி பெயர்த்ததே இல்லை.. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள்... நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது... அதைத்தான் நான் கத்துக்கிட்டேன்.. ஹிந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும்... எனக்குதான் ஹிந்தி தெரியாதே" என்றார்.