தமிழகத்தில் மதரீதியான அச்சுறுத்தல் இல்லை- மத அடிப்படையில் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாது: கனிமொழி
சென்னை: தமிழகத்தின் கலாசாரம் பன்முகத்தன்மை வாய்ந்தது; பாஜகவால் தமிழகத்தில் மதரீதியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்த முடியாது என்று திமுக மகளிரணி செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கனிமொழி அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் லோக்சபா தேர்தலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கொண்டோம். தேனி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
திமுக வேட்பாளர்கள் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆகையால் கருணாநிதி இல்லாத நிலையில் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறோம். திமுகவானது வலுவான கட்டமைப்பைக் கொண்டது. நீண்டகாலம் கட்சிப் பணி அனுபவங்களைப் பெற்றவர் மு.க.ஸ்டாலின். எப்படி சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது என்பதற்கான வியூகங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும். எங்கள் தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவதை இலக்காக கொண்டுதான் தேர்தல் பிரசாரம்.. கனிமொழி எம்பி
பாஜகவின் வியூக
அதிமுகவைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என நினைக்கிறது. மத அடிப்படையில் வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. இது சட்டசபை தேர்தலுக்கான பிரச்சனை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தேசத்துக்குமான பிரச்சனை. இந்த மதவாத சக்திகளுக்கு எதிரான அணியில் திமுக முன்னிலை வகிக்கிறது.
அதிமுக அரசு மீது அதிருப்தி
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம். அதிமுக மீது மக்களிடத்தில் வெறுப்பு உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசின் விருப்பத்துக்காக மாநிலங்களின் உரிமைகளை அதிமுக அரசு விட்டுக் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்ததை மக்கள் வேதனையுடன் பார்க்கின்றனர். அதிமுக அரசின் மீதான வெறுப்புக்கு பதிலாக திமுக அரசையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை திமுக வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பிரச்சனை எதுவும் இல்லை. காங்கிரஸ்-திமுக தலைமைகள் இடையே நல்ல புரிதல் உள்ளது. ஒவ்வொரு கூட்டணி கட்சியும் திருப்தி அடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். அதேபோல் மாநில அளவில் இந்த தேர்தல் எந்த அளவு முக்கியமானது என்பதை ஒவ்வொரு கட்சியும் உணர்ந்தும் இருக்கின்றன. ரஜினிகாந்தை பொறுத்தவரையில் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்திருக்கிறார்.
ரஜினி தாக்கம் இருக்காது
ரஜினிகாந்த் அரசியலுக்கே வந்தாலும் இந்த தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் பாதிப்பையும் அவரால் ஏற்படுத்தவும் முடியாது.
மதபிளவுகளுக்கு இடம் இல்லை
பாஜகவைப் பொறுத்தவரையில் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக முத்திரை குத்த பார்க்கிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருகு எதிராக பாஜகவால் எதுவும் பேசமுடியாத நிலை இருக்கிறது. தமிழகத்தில் மத அடிப்படையிலான அரசியல் எடுபடாது என்பதையும் பாஜக புரிந்து வைத்துள்ளது. மத அடிப்படையிலான பிளவுகளை கேரளாவில் கூட மக்கள் நிராகரித்தே இருக்கின்றனர். இங்கே அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். இங்கே கோவில் கட்டுவது தொடங்கி மத அடிப்படையில் எந்த பிரச்சனையும் இல்லை.. இந்த மண்ணின் கலாசாரம் வேறுபட்டது. மத அடிப்படையில் மக்களிடையே அச்சுறுத்தல்கள் இல்லை. மத அடிப்படையில் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி பெறாது. இங்கே பிற மதங்களை அச்சுறுத்துகிற பாஜகவின் வியூகம் எடுபடாது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை
தமிழகத்தில் பாஜக முதன்மையாக கட்சியாக வர முயற்சிக்கிறது என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் முன்பைவிட தொண்டர்கள், தலைவர்கள் எண்ணிக்கை என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது அச்சப்படுகிற அளவுக்கு இல்லை. அதை நோக்கி பயணிக்கின்றனர். அதிமுகவின் உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்க்கிற கட்சி திமுக. எதிர்காலத்தில் திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பு என்பது இல்லை. ஏனெனில் பாஜகவும் திமுகவும் இருவேறான நிலைப்பாடுகளைக் கொண்டவை. தமிழகத்திலும் கேரளாவிலும் மக்களை மதரீதியாக அவ்வளவு எளிதாக பிரித்துவிடமுடியும் என்பதும் சாத்தியமானது அல்ல.
நாத்திகர் என்பதில் பெருமிதம்
நாத்திகராக இருப்பது ஒன்றும் குற்றம் அல்ல. நான் நாத்திகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். திமுகவில் ஏராளமான நாத்திகர்கள் உள்ளனர். ஆனால் திமுகவில் 90% இந்துக்கள் உள்ளதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் என அனைத்துதரப்பினரும் திமுகவில் உள்ளனர். நாங்கள் இந்து கட்சி என்றும் சொல்லவில்லை. நாத்திகர் கட்சி என்றும் சொல்லவில்லை. திமுகவை அண்ணா தொடங்கிய போது ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என தெளிவாகவே சொல்லி இருக்கிறார். இடதுசாரிகளும் திமுகவும் பெரும்பான்மையினருக்கு எதிரான கட்சிகள் என்பது பாஜகவின் பிரசாரம். அதற்காக நாங்கள் விளக்கம் தர வேண்டியுள்ளது. நாங்கள் பெரும்பான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல. முஸ்லிம்களின் உரிமைகளுக்கு போராடுகிற நாங்கள் இந்துக்களின் உரிமைகளுக்கும் போராடுகிறோம். யாருடைய உரிமையையும் யாரும் பறித்துவிட முடியாது என்பதில் திமுகவின் நிலை தெளிவாக இருக்கிறது. ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரானது திமுக; தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரானது திமுக. மத, ஜாதிய அடிப்படையில் ஒருவரது உரிமையை பறித்துவிட முடியாது. யாரையும் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றுமாறு நாங்கள் திணிக்கவில்லை. நாத்திகர்கள் திமுகவில் இருப்பதும் தவறானதும் அல்ல.
கமல் கட்சியுடன் கூட்டணியா?
கமல்ஹாசன் இல்லாமலேயே திமுகவால் வெல்ல முடியும். திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி சேர விரும்பினால் அது குறித்து திமுக தலைமை முடிவெடுக்கும். லோக்சபா தேர்தலில் எந்த ஒரு புதிய கட்சியின் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற்றிருக்கிறோம். திமுக கூட்டணியில் ஒரு கட்சி இடம்பெறுவது; வெளியேறுவது தொடர்பாக கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும்.
பெரியார் சிலை சேதம்
தமிழகத்தில் பலவீனமான ஒரு அரசு இருப்பதால்தான் தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால் பெரியார் சிலைகளை சேதப்படுத்துவதாலோ பெரியாரின் சித்தாந்தத்தின் மீது தாக்குதல் நடத்துவதாலோ மேலும் கூடுதலாக இளைஞர்கள் பெரியாரை நோக்கித்தான் வருவார்கள் என்பதுதான் நிதர்சனம். சமூக வலைதளங்களில் திராவிட சித்தாந்தத்தை ஆதரிக்கிற இளைஞர்களை ஏராளமாக பார்க்க முடிகிறது.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறியுள்ளார்.