போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா!
சென்னை: தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் எனவும் தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ.தீபா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும் ஆனால் இருவரும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது. ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, ரூ.188 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவர்களுக்கு ஐகோர்ட்டு வழங்கியது. மேலும், தீபா, தீபக் சொந்த செலவில் தமிழக அரசு இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை தயாராக உள்ளது.
புரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா!
அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் கடிதம் அனுப்பியும் அவர்கள் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வக்கீல், காவல்துறை கடிதத்துக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில்,தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் தீபாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.