உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்
சென்னை: உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாத இவர்களிடம் உரையாடுகையில் என் பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன் என திமுக இளைஞரணி கூட்டம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளராக கடந்த ஜூலையில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு முதல்முறையாக சென்னை, கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இளைஞரணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 லட்சம் உறுப்பினர்கள்
குறிப்பாக 15 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற விதியை மாற்றி 18 முதல் 35 வயதுள்ளவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம், அவர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. இதேபோல் தி.மு.க-வில் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் ஒழிப்பு
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தூர்வாரப்படாமல் உள்ள நீர்நிலைகள், பிளாஸ்டிக் பயன்பாடுகள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளில் தி.மு.க இளைஞரணி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன் இந்தப் பணிகளைக் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
உதயநிதி உருக்கம்
இந்த கூட்டம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,. தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. உழைப்பைத்தவிர வேறொன்றும் அறியாத இவர்களிடம் உரையாடுகையில் என் பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன். நன்றி சகோதரர்களே! என்று கூறியுள்ளார்.
உழைப்பவர்களுக்கு உரிமை
இது தொடர்பாக டுவிட்டரில் அவரது கருத்துக்கு கீழ் பதில் கொடுத்துள்ள ஒருவர் " உழைப்பவர்களுக்கே உரிமை கொடுங்கள் ஜால்ராக்களை தூக்கி தூர வையுங்கள்" என்று கூறியுள்ளார்.
|
திமுகவின் விழுதுகள்
இன்னொருவர் தனது பதிவில் " இவர்கள் எல்லாம் கூட ஏதோ ஒரு வகையில் திமுகவின் பதவியில் இருப்பவர்கள்எந்த பதவியிலும் இல்லாத உறுப்பினர் அட்டை மட்டுமே வைத்துக் கொண்டு திமுகவை தாங்கி பிடிக்கும் ஆலமரத்து விழுதுகளாய் ஏன் சிலர் உறுப்பினர் அட்டையே பெறாத ஆனி வேர்களாய் கட்சியை காத்து வருகின்றனர் அவர்களிமும் உரையாடுங்கள் என கூறியுள்ளார்.