அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை
சென்னை:அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.
இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது பொன்மாணிக்கவேல் ஆஜரானார்.
அப்போது, கிண்டியில் அலுவலகம் தர முடியாது என உயரதிகாரி கூறுவதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். நீதிமன்றம் உத்தர விட்டும் வழக்கை விசாரிக்க அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்.
போலீஸ் அதிகாரிகள் யாரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. எனக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை எனக்கு எதிராக புகார் தர செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.
அப்போது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நீதிமன்றம்தான் நியமித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலை குறித்து விளக்க தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டும்.
பொன்மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என கண்டனம் தெரிவித்து, விசாரணையை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வரும் 9ம் தேதி தலைமை வழக்கறிஞர் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.