ரொம்ப சின்ன வீடு அது.. தரையில்தான் படுத்து தூங்குவோம்.. சுந்தர் பிச்சையின் மறுபக்கம்
சிறிய வாடகை வீட்டில் தரையில்தான் படுத்து கொள்வோம் என சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.
சென்னை: அப்ப நாங்க இருந்தது ஒரு வாடகை வீட்லதான்... அது ரொம்ப சின்னது... அதனால எல்லோரும் தரையிலதான் படுத்து தூங்குவோம் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நம் தமிழருமான சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
"தி நியூயார்க் டைம்ஸ்" நாளேட்டுக்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில்தான் தனது இளமை கால வாழ்க்கையை பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
அழகான வாழ்க்கை
''இன்னைக்கு நான் ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறேன். ஆனால் சின்ன வயசுல என் வாழ்க்கை ரொம்ப எளிமையா இருந்தது. அந்த எளிமையான வாழ்க்கை ரொம்ப அழகானது. அந்த வாழ்க்கையை இப்போ இருக்கிற வாழ்க்கை முறையோடு ஒப்பிடவே முடியாது.
தரையில தூங்குவோம்
அப்போ நாங்க சென்னையிலதான் இருந்தோம். ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். ஆனா அந்த வீடு ரொம்ப சின்னதா இருக்கும். அதனால நாங்க எல்லாரும் தரையில படுத்துக்கிட்டுதான் தூங்குவோம். திடீர்ன்னு சென்னையில பஞ்சம் வந்துடுச்சு. ரொம்ப கஷ்டப்பட்டோம். பயமே வந்திடுச்சு.
புது ஃப்ரிட்ஜ்
அதனாலதான் இன்னைக்குகூட நான் தூங்கும்போது என் பக்கத்துல ஒரு பாட்டில் தண்ணிய வெச்சிக்கிட்டுதான் தூங்கறது. அப்போ எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் எல்லாம் கிடையாது. எல்லார் வீட்டிலயும் ஃப்ரிட்ஜ் இருக்கும். ஆனா எங்க வீட்டில மட்டும் இருக்காது. ரொம்ப நாள் கழிச்சுதான் வாங்கினோம். புதுசா வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் வந்தப்போ ரொம்ப சந்தோஷம் ஆயிட்டோம்.
கிரிக்கெட் விளையாடுவேன்
அப்போவெல்லாம் நான் நிறைய படிப்பேன். கையில எது கிடைச்சாலும் படிப்பேன். அதுவும் சார்லன்ஸ் டிக்கன்ஸ் புத்தகம் என்றால் உயிர். தெருவுல பசங்களோடு போய்ட்டு கிரிக்கெட் விளையாடுவேன்." என்று தன் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறினார் மதுரைக்காரர் சுந்தர்பிச்சை!!