"மிஸ்டர் பழனிசாமி.. கிழித்து தோரணம் தொங்கவிட நான் ரெடி.. நீங்க ரெடியா".. பொங்கிய ஸ்டாலின்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்
சென்னை: "மிஸ்டர் பழனிசாமி... உங்கள் ஊழல்களைத் தோரணம் தொங்கவிட ஒற்றை ஆளாக நான் ரெடி! நீங்கள் ரெடியா?" என்று இதுவரை இல்லாத அளவுக்கு முதல்வருக்கு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
வழக்கமாக தேர்தல் சமயங்களில், தங்களது பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் மாறி மாறி விமர்சிப்பது இயல்பான ஒன்றுதான்... ஆளும் தரப்பு செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால், எதிர்க்கட்சிகளோ, ஆட்சிக்கு வந்தால் செய்ய போகும் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கும்.
இவைகளுக்கு நடுவில், ஒருவருக்கொருவர் புகார்களை அள்ளி வீசிக் கொள்வார்கள்.. இதைதான் தமிழகம் இத்தனை வருஷமாக பார்த்து வருகிறது. ஆனால், இந்த முறை தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானது.. இதற்கு காரணம்,ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், 10 வருட காலம் கழித்து ஆட்சியை பிடிக்க திமுகவும் கட்டாயத்தில் உள்ளன.
திமுக
அதற்காக அதிமுக, திமுக என இரு தரப்புமே ஊழல்களை லிஸ்ட் போட்டு குற்றச்சாட்டுகளை மாறி மாறி சொல்லி வருகிறார்கள்.. அப்படித்தான் ஈரோட்டு பிரச்சாரத்துக்கு போன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி... நீங்கள் ரெடியா? " என்று ஸ்டாலினுக்கு சவால் விடுக்கவும், இதற்கு ஸ்டாலின் மறுசவால் விடுத்துள்ளார்.. அதற்காக ஒரு அறிக்கையே வெளியிட்டுவிட்டார்.. மேலும் தன்னுடைய ட்வீட், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் இந்த சவாலை பதிவு செய்துள்ளார்.
ட்வீட்
அந்த அறிக்கை, ட்வீட்டில் ஸ்டாலின் சொல்லி உள்ளதாவது: "இந்தியாவிலேயே, ஊழலுக்காகச் சிறைக்குப் போன முதலமைச்சரைப் பெற்ற ஒரே கட்சி அதிமுக. மட்டும்தான்! தற்போதைய முதலமைச்சர் திரு. பழனிசாமியும், ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்டவர்தான்! அத்தகைய என்றும் மாறாத ஊழல் கறைபடிந்த - ஊழல் நாற்றம் வீசும் அ.தி.மு.க.வின் இன்றைய முதலமைச்சர் திரு. பழனிசாமி, ஊழல் புகார்கள் குறித்த விவாதத்திற்கு வருமாறு சவடால் விடுகிறார். உங்கள் ஊழல்களைத் தோரணம் தொங்கவிட ஒற்றை ஆளாக நான் ரெடி! நீங்கள் ரெடியா Mr.பழனிசாமி?
சவடால்
"என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?' என்று முதல்வர் பழனிசாமி நேற்று சவால், சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்! அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, 'சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்' என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும்.
ஊழல் புகார்கள்
'எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்' என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி, தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள். அதே மாதிரி, 'வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்' என்று தமிழக ஆளுநருக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே, விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள்.
ஓ. பன்னீர்செல்வம்
அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில், குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள், என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி, முதல்வர் 'மிஸ்டர்' பழனிசாமி நீங்கள் ரெடியா?" என காட்டமாக கேட்டுள்ளார்.
கமல்
ஸ்டாலினின் இந்த சவாலுக்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், இவர்கள் இருவரும் மாறி மாறி ஊழல் புகார்களை சொல்லி வருவதை தமிழக மக்கள் தேமே என்று பார்த்து வருகிறார்கள்.. இதைவிட ஹைலைட், இவர்கள் 2 பேரின் ஊழல் குற்றச்சாட்டுகளையும் கமல் ஒருபக்கம் லிஸ்ட் போட்டு சொல்லி கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது!