ஏகப்பட்ட வதந்திகள்.. நான் கைப்பற்றவில்லை.. துக்ளக் ஆசிரியரானது எப்படி? குருமூர்த்தி பரபர விளக்கம்
சென்னை: துக்ளக் இதழ் ஆசிரியராக தான் பொறுப்பேற்றதன் பின்னணி என்ன என்பது குறித்து, குருமூர்த்தி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவுவதாகவும், எனவே இந்த விளக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்ன சொல்லியுள்ளார் என பார்க்கலாமா?
இதோ குருமூர்த்தி வரிகள்: ஒரு வருடத்திற்கும் மேலாக என்னைப் பற்றியும் துக்ளக்கைப் பற்றியும் வாட்ஸ்அப் வதந்திகள் ட்விட்டரில் பரவி வருகின்றன. சோ, துக்ளக் மற்றும் என்னைப் பற்றிய உண்மைகளை இப்போது வெளிப்படுத்துகிறேன்.
மனைவி பங்குதாரர்
1988ஆம் ஆண்டில், ராம்நாத் கோயங்கா, ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து துக்ளக்கை பேச்சுவார்த்தை நடத்தி வாங்குமாறு எனக்கு அறிவுறுத்தினார். நான், பாலசுப்பிரமணியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன், துக்ளக் வாங்கப்பட்டது, அதில் கோயங்கா என் மனைவியை சோவுடன் ஒரு கூட்டாளியாக மாற்றினார். நான் 'சிஏ' என்பதால், பங்குதாரராக இருக்க முடியாது. என் மனைவி 1991 இல் நிறுவனத்திலிருந்து விலகினார். அதன்பிறகு சோ என்னை தமிழில் எழுத ஊக்குவித்தார். என்னை தமிழ் பத்திரிகைக்கு அறிமுகப்படுத்தினார்.
எழுத்து ஆரம்பம்
நான் துக்ளக் டீமுக்குள் நுழைந்தேன், சோவும் நானும் பல்வேறு அரசியல் உத்திகளில் பணியாற்றினோம். 2007ஆம் ஆண்டில் நான்தான், துக்ளக்கில் அவரது வாரிசாக வேண்டும் என்று சோ வலியுறுத்தத் தொடங்கினார். அவருக்குப் பிறகு யாரும் பத்திரிகையை வாங்க மாட்டார்கள், எனவே அதை மூடுவது நல்லது என்று நான் பதில் சொன்னேன். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், நான் அவருடைய வாரிசாக இருக்க விரும்பவில்லை என்றாலும், அப்போது துக்ளக்கிற்குச் சொந்தமான Nachiketas Publications P Ltd நிறுவனத்தின் 50% பங்குகளையாவது வாங்க வேண்டும் என்று, கடைசியாக வலியுறுத்தினார். எனவே, 2008 ஆம் ஆண்டில் நான் NPPLன் 50% மூலதனத்தை சோவுடன் சேர்ந்து, முதலீடு செய்தேன்.
நம்பிக்கை இல்லை
ஒரு நாள் நான் அவரிடம், உங்களுக்கு பிறகு, துக்ளக் கதை முடிந்துவிடும் என்றும் என்னால், இந்த பத்திரிக்கையை, தொடர முடியாது என்றும் சொன்னேன். எந்த வகையிலும் அதைச் செயல்படுத்தும் நம்பிக்கை எனக்கு இல்லை. யாருக்கு தேவையோ அவரை வாங்கிக் கொள்ள சொல்லுங்கள் என்று சொன்னேன்.
2013ம் ஆண்டில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், எல்லா பங்குகளையும் சோவுக்கு மாற்றினேன். ஆனாலும், சோ என்னை பொறுப்பேற்க சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி உட்பட என்னுடனும், இதுபற்றி, பலரிடம் அவர் பேசினார்.
பொறுப்பேற்பு
சோ இறக்கும் வரை நான் அவரிடம் ஆம் என்று ஒருபோதும் சொல்லவில்லை. சோ உடல் தகனம் செய்யப்பட்ட மறுநாளே, துக்ளக் இதழை அச்சிடும் குமுதத்தின், வரதராஜனுடன், முழு துக்ளக் குழுவும் என்னைச் சந்தித்தனர். சோவுக்கு பிறகு நான்தான் துக்ளக்கை வழிநடத்த வேண்டும் என்று சோவே தங்களிடம் கூறியதாகவும், ஒப்புக் கொள்ளாவிட்டால் துக்ளக்கை மெல்ல, மெல்ல மூட வேண்டியதுதான் என்றும் கூறினர். அந்த நேரத்தில் தமிழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களைக் கண்டு கொண்டிருந்தது. எனவே, நான் பொறுப்பேற்க முடிவு செய்தேன்.
|
கைப்பற்றவில்லை
அப்படித்தான் துக்ளக் என் தலை மீது வந்தது. 1986இல், நான் துக்ளக்கில் எழுதத் தொடங்கியபோது ஒரு சபதம் எடுத்தேன். எழுதுவதற்கு ஒரு ரூபாய் பெறக்கூடாது என்று. இன்று நான் எனது நேரத்தின் 50 சதவீதத்தை துக்ளக்கிற்கு ஒதுக்குகிறேன், ஆனாலும், அதிலிருந்து ஒரு பைசா எடுக்கவில்லை.
நான் யாரிடமிருந்தும் எதையும் கைப்பற்ற வேண்டியதில்லை. நான், துக்ளக்கை கைப்பற்ற விரும்பியிருந்தால்1991 ல் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்திருக்க மாட்டேன். 2008 இல் 50% பங்குகளை மாற்றியிருக்க மாட்டேன். இவ்வாறு குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.