கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து முன்கள பணியாளர்களான டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், செவிலியர் உள்ளிட்டோர் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் அண்மைக் காலமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் 18க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஐஏஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!
தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதை அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித் ஷா, தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி ட்விட்டரில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமித் ஷா விரைவில் குணம் அடைய வேண்டி இறைவனை பிரார்த்திப்பதாக பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.