கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.. பொன். ராதாகிருஷ்ணன்
கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில ஆவணங்களை வெளியிட்டார். அவர் இதில் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர் திமுக மீது விமர்சனங்களை வைத்தார்.
அதில், கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. இத்தனை நாட்களாக இது குறித்து ஏன் எந்த பிரச்சனையும் வரவில்லை. கொடநாடு விவகாரம் இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன.
கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதற்கு பின் யாரு இருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும்.
இது குறித்து தீவிர விசாரணையை இப்போதே தொடங்க வேண்டும். தமிழக அரசு இதில் வேகமாக களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவை கூட்டத்தில் சரியாக செயல்படாதவர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்ததால் கிராமசபை கூட்டத்தை திமுக நடத்துகிறது. பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள், என்று குறிப்பிட்டுள்ளார்.