அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரிடம் பேசினேன்.. கவனம் பெற்ற அண்ணாமலையின் பேட்டி
சென்னை: அதிமுகவில் இரு அணிகளாக பிளவு பட்டு தலைமை பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்புஅளிக்க உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பையும் பாஜக அனுசரிக்கும் விதமாக நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
அதிமுகவில் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த ஜுலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் எமெர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புது விளக்கம்
அதிமுக வழக்கு
ஆனால், ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி நடைபெற்ற இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த ஓ பன்னீர் செல்வம் இது தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இருவரையும் சந்தித்த மோடி
இந்த வழக்கில் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை பாஜக மேலிடம் இதுவரை யாருக்கு தங்கள் ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஆனால், ஓபிஎஸ் தரப்பை இதுவரை டெல்லி தலைவர்கள் தனியாக சந்திக்கவில்லை. பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் இருவரையும் கூட்டாக சந்தித்தாரே தவிர தனியாக எந்த ஒரு தரப்பையும் சந்திக்கவில்லை.
அண்ணாமலை பேட்டி
இதனால், அதிமுகவின் இரு தரப்பையுமே பாஜக மேலிடம் சமமாக கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக பாஜக தலைமையும் இதுவரை இவ்விவகாரத்தில் வெளிப்படையாக பேசவில்லை. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும் போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அண்ணாமலை கூறும் போது, அதிமுக இடைக்கால பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசி வாயிலாக பேசினேன். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுடன் தொலைபேசி வாயிலாக பேசினேன். அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை மூத்த தலைவர்களுக்கு டெல்லியில் தெரியபடுத்தி இருக்கிறேன். அவர்கள் பேசிய பிறகு நிலைப்பாட்டை நாங்கள் சொல்கிறோம்" என்றார்.
நேரடியாக ஆதரவு அளிக்காத..
அதிமுக தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், இதுவரை அதிமுகவின் எந்த ஒரு தரப்புக்கும் நேரடியாக ஆதரவு அளிக்காத நிலையில், அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.