கருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது.திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தொண்டர்கள், திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்
வைரமுத்து எப்படி
இந்த கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும் உருக்கமாக பேசினார். அதில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி என் தமிழ் ஆசான். கருணாநிதி இறந்து 365 நாட்கள் ஓடி மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசி தமிழனின் இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை அவர் இருப்பார். ஸ்டாலின் ஆட்சி வரும் முன்பே அவர் கருணாநிதிக்கு சிலை வைத்துள்ளார்.
தொண்டர்
இது தலைவனுக்கு தொண்டர் ஆற்றும் கடமை. இறந்தும் கூட கருணாநிதி நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவர் செய்த காரியங்கள் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார். கருணாநிதி ஒரு தத்துவமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். கருணாநிதியின் சிலை என்பது ஒரு குறியீடு.
தமிழ்
தமிழ்தான் கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவுச்சின்னம். அவர் செய்த சாதனைகள் எல்லாம்தான் அவரின் நினைவுச் சின்னம். காந்தி மறைந்த பின் இன்னொரு நபர் இப்படி வர மாட்டார் என்று கூறினார்கள். அப்படித்தான் கருணாநிதி மறைந்த பின்பும் அப்படித்தான் தோன்றியது.
ஐந்து முறை
ஐந்து முறை சட்டசபைக்கு அவர் சென்றுள்ளார். முறைப்படி பார்த்திருந்தால் சட்டசபைக்கு அவர் வாடகை கொடுத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய வீட்டை விட சட்டசபைக்குத்தான் அதிகம் சென்று இருக்கிறார். 6 பாகங்களில் அவர், 4160 பக்கத்திற்கு சுயசரிதை எழுதி இருக்கிறார் என்றால் பாருங்கள்.
எப்படி
அவரின் வாழ்க்கை அவ்வளவு நீண்டது. அவர் தமிழர்களுக்காக மட்டும் போராடவில்லை. அவர் அனைத்து மாநில மக்களுக்காகவும் போராடினார், என்று வைரமுத்து தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.