கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி!
சென்னை: தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் தேவி லாலின் இந்தி உரையை நான்தான் மொழி பெயர்த்தேன், கனிமொழி மொழி பெயர்க்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக கனிமொழி கோபத்துடன் டிவிட் செய்து இருந்தார். கனிமொழியின் இந்த டிவிட் இணையத்தில் வைரலாகவே நாடு முழுக்க மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான அதிர்வலைகள் எழுந்துள்ளது. தமிழகம் இந்திக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளது.
சாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்!
எப்படி கனிமொழி
இந்த நிலையில் கனிமொழியின் இந்த புகாரை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மறுத்து இருந்தார். கனிமொழி சொல்வது உண்மையில்லை. விமான நிலைய அதிகாரிகள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். அதோடு கனிமொழிக்கும் இந்தி தெரியும். 1989ல் முன்னாள் துணை பிரதமர் சவுதாரி தேவி லாலின் இந்தி உரையை கனிமொழிதான் மொழிபெயர்த்தார், என்று எச். ராஜா புதிய திரியை கொளுத்தி போட்டார்.
புகார் வைத்தார்
இந்த நிலையில் டிவிட்டரில் பாஜகவினர் பலர் இதே புகாரை வைத்தனர். கனிமொழிக்கு இந்தி தெரியும். அவர் நன்றாக இந்தி பேசுவார் என்று பலரும் குறிப்பிட்டனர். ஆனால் இதை திமுக தரப்பு தொடர்ந்து மறுத்தது. திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எச். ராஜா சொல்வதில் உண்மை இல்லை . அவர் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்று மறுப்பு தெரிவித்தனர்.
தவறு ஏன்?
இந்த நிலையில் எச். ராஜாவின் புகார் முழுக்க முழுக்க தவறானது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் 1980களில் ஹரியானா மாநில ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக இருந்தார். ஹரியானாவில் முதல்வராக தேவி லால் இருந்த போது அவருக்கு நம்பிக்கையான அதிகாரியாக இவர் இருந்தார். தேவி லால் துணை பிரதமராக இருந்த போது தமிழத்திற்கு 1989ல் டிசம்பர் மாதம் வந்தார்.
என்ன விளக்கம்
அப்போது என்ன நடந்தது என்பதை தேவசகாயம் விளக்கி உள்ளார். அதன்படி. தேவி லால் துணை பிரதமராக இருந்த போது தமிழத்திற்கு 1989ல் வந்தார். அப்போது அவர் கோவையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் கோவையில் விவசாய மீட்டிங் முடித்துவிட்டு தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். நான் அப்போது சென்னையில் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு தங்கி இருந்தேன். தேவி லாலின் வேண்டுகோளுக்கு இணங்க அவரோடு அந்த பயணத்தில் கலந்து கொண்டேன்.
உடன் இருந்தேன்
அவர் சென்ற இடங்களில் எல்லாம், அவருக்கு நான்தான் மொழிபெயர்ப்பு செய்தேன். அவர் உருது நெடி அதிகமாக இந்தி பேசுவார்.அதை நான்தான் தமிழில் மொழி பெயர்த்தேன். அவரின் கூட்டங்கள் தொடங்கி செய்தியாளர் சந்திப்பு வரை அனைத்திலும் உடன் இருந்தேன். அனைத்திலும் நானே தமிழில் அவருக்காக மொழி பெயர்த்தேன்.
இந்தி பெயர்ப்பு
அப்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கனிமொழி தீவிர அரசியலுக்கு வரவே இல்லை. ஆம் அவர் எங்குமே கூட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை. கனிமொழியை இதில் தொடர்பு படுத்தவே முடியாது. நான்தான் தேவி லால் அருகே எப்போதும் இருந்தேன். கனிமொழி எந்த மொழி பெயர்ப்பும் செய்யவில்லை, என்று தேவசகாயம் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கனிமொழி மறுப்பு
இதன் மூலம் எச். ராஜா குறிப்பிட்டதை தவறு என்று தேவசாயகம் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கனிமொழியும் எனக்கும் இந்தி தெரியாது. எனக்கு தெரிந்தது இரண்டு மொழிதான். தமிழ் மற்றும் ஆங்கிலம். இதுதான் நான் பள்ளியில் படித்த மொழிகள். எனக்கு இந்தி தெரியும் என்று நிரூபியுங்கள் பார்க்கலாம், என்று கனிமொழி சவால் விட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.