தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார் எனக் கூறிய கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு முன் வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் வேண்டாம் என்று தமிழக அரசு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு சரியான நேரத்தில் தண்ணீர் கொடுக்க முன்வந்ததற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முழுமனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
I wholeheartedly thank Chief Minister of Kerala @vijayanpinarayi for his timely offer to provide water to Tamil Nadu.
— M.K.Stalin (@mkstalin) 20 June 2019
Urge Govt of Tamil Nadu to work with Govt of Kerala to help citizens of our state tide over this unprecedented water crisis.
முன் எப்போதும் இல்லாத, தண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவ கேரள அரசோடு, தமிழக அரசு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.