ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்.. ஒரு வேளை ஆரம்பித்தால் நான் தடுப்பேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்
ரஜினியை கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன் என ஈவிகேஎஸ் கூறியுள்ளார்.
ராயபுரம்: ரஜினியை கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக நான் அட்வைஸ் செய்வேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நேரு பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரத்தில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
இரட்டை வேடம் போடுவது போல ரஜினியின் பேச்சு இருக்கிறது. முதல் நாள் பேசியது அவரது சொந்த கருத்து... 2-வது நாள் குருமூர்த்தியை பார்த்துவிட்டு வந்து பேசியது.
அறிவுறுத்துவேன்
ரஜினி என்னுடைய நண்பர். எனக்கு தெரிந்து அவர் கட்சியை ஆரம்பிக்க மாட்டார். ஒருவேளை ஆரம்பித்தால் தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு கண்டிப்பாக அறிவுரை சொல்வேன்.
தேர்தலுக்காக இல்லை
மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் தற்போது இணைந்து இருக்கின்றன. இது தேர்தலுக்காக இல்லை. மதசார்பற்ற நாடாக இந்த நாடு என்றுமே நீடிக்க வேண்டும் என்பதற்காத்தான்.
கமலுடன் கூட்டணி?
அதோடு நாட்டின் ஒருமைப்பாடு எப்போதுமே கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும்தான். மேலும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவராக கமல் இருப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது குறித்து ஸ்டாலினும், ராகுல்காந்தியும்தான் முடிவு செய்ய வேண்டும்.
கூத்தடிக்கிறார்கள்
மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும். ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டும், ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்." இவ்வாறு ஈவிகேஎஸ் கூறினார்.