மீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம்
சென்னை: தாம் மீண்டும் வருவேன். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:
எங்களது திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணினோம். எங்களுக்கு தொண்டர்கள்தான் குடும்பம். அதனால் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிறது. அதற்காக குட்ட குட்ட குனிகிற ஜாதி அல்ல நாங்கள்.. மீண்டும் நாங்கள் எழுவோம். 2021 சட்டசபை தேர்தலுக்காக கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்வோம்.
ஜாமியாவில் மாணவர்களை சுட்டவருக்கு யார் காசு கொடுத்தது.. சொல்லுங்கள்.. ராகுல் காந்தி பரபரப்பு கேள்வி
விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மீண்டும் பிரசாரம் செய்வார். 2021-ல் தேமுதிக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமைப்பதுதான் நமது நோக்கம். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும் வரை நாம் ஓயமாட்டோம்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோமா? அல்லது தனியாக தேர்தலை சந்திப்போமா? என்பதை தலைவர் விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
பின்னர் பேசிய விஜயகாந்த், மீண்டும் நான் வருவேன்; மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் நான் வருவேன் என்றார். அவரது இந்த பேச்சு தேமுதிகவினரை உற்சாகப்படுத்தியது.