நாங்க என்ன கருவேப்பிலையா? விடமாட்டோம்... நிச்சயம் போட்டியிடுவேன் - அதிரடி கிளப்பிய ராதிகா
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப்போகிறார் ராதிகா சரத்குமார். புதிய அணியை உருவாக்கி தேர்தலில் களமிறங்கும் ராதிகா வெற்றிக்கனியை பறிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: நாங்க என்ன கருவேப்பிலையா? கொத்தமல்லியா? எங்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய.. இந்த முறை விடமாட்டோம் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார். கோவில்பட்டி, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடச்சொல்லி கேட்கிறார்கள். கடவுள் கட்டளையிட்டால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார் ராதிகா.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தவிர வேறு யாரும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பதவி பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி.. பின்னணியில் செம பிளான்.. மய்யமும் சேர்ந்தால் "மாஸ்தான்"
சமக முதன்மை துணைப்பொதுச்செயலாளர்
புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக ஏ.என் சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
வேளச்சேரியில் களமிறங்கும் ராதிகா
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணைப்பொதுச்செயலாளர் விவேகானந்தன். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ள ராதிகா முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்தார்.
ஆரம்பமே அதிரடி
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராதிகா, அவருக்கு பயம் எதுவும் கிடையாது அன்புக்கு மட்டுமே சரத்குமார் கட்டுப்படுவார் என்றார். சமத்துவ சொந்தங்கள் காட்டும் அன்பை வைத்து அவர் சாதிப்பார். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தேர்தல் என்றும் குறிப்பிட்டார்.
விடமாட்டோம் நாங்க
நாங்க என்ன கறிவேப்பிலையா? கொத்தமல்லியா? இந்த முறை விடமாட்டோம். நிச்சயம் போட்டியிடுவோம் என்று சொன்னார். வேளச்சேரி, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடச்சொல்லி சொல்லியிருக்கிறார்கள். கடவுள் கட்டளையிட்டால்... என்று சொல்லிவிட்டு எனக்கு கடவுள் சரத்குமார்தான் அவர் சொன்னால் நான் போட்டியிடுவேன் என்று அதிரடியாக பேசினார்.