2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்
சென்னை: 2019-20-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியத்தின் கணிப்பை மேற்கோள்காட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு மிகப் பெரும் பொருளாதார தேக்க நிலையை சந்தித்து வருகிறது. இந்த தேக்க நிலையை தகர்க்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை அச்சிடும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் இன்று பதிவிட்டுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் ஆண்டில் 5%க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழே போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏற்கனவே விமர்சித்திருந்தார் சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத். இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த கணிப்பிற்காக சர்வதேச நிதியம் மற்றும் அதன் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் மீது மத்திய அரசு குற்றம்சாட்டும்.
இதனையும் நாம் எதிர்கொள்வோம். இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.